மண்சரிவு அபாயம் : 3 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தினால் இன்று (14) மாலை 4:00 மணி முதல் நாளை (15) மாலை 4:00 மணி வரை செல்லுபடியாகும் வகையில் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 3 மாவட்டங்களில் உள்ள பல பிரதேச செயலக பிரிவுகளுக்கு முதலாம் கட்ட (மஞ்சள்) மண்சரிவு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிக மழைவீழச்சி
கடந்த 24 மணித்தியாலங்களில் பெய்த மழைவீழ்ச்சி 75 மில்லிமீற்றரையும், மண் நீர் குறியீடு 100 மில்லிமீற்றரையும் தாண்டியுள்ளதால், மழை தொடரும் பட்சத்தில் மண்சரிவு, சாய்வுகள் இடிந்து விழுதல், பாறைகள் விழுதல் மற்றும் தரை உள்ளிறக்கம் போன்ற அபாயங்கள் ஏற்படக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

அந்தவகையில், களுத்துறை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர மற்றும் அகலவத்தை பிரதேச செயலக பிரிவுகளுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலக பிரிவு மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளுக்கும், இரத்தினபுரி மாவட்டத்தின் அயகம, பெல்மதுள, கொடகவெல, எலபாத, கலவான, இரத்தினபுரி மற்றும் நிவித்திகல பிரதேச செயலக பிரிவுகளுக்கும் இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |