ரணில் அரசுக்கு அடித்த அதிர்ஷ்டம்! அந்நிய செலாவணிகள் பெருக வாய்ப்பு
இலங்கைக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய, இந்த மாதத்தின் (ஓகஸ்ட்) முதல் இரு வாரங்களில் 17,000 சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
பிரித்தானியா உட்பட ஐரோப்பிய நாடுகளிலும் இந்தியா மற்றும் கனடா ஆகிய நாடுகளிலிருந்தும் அதிகமான சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர்.
அந்நியசெலாவணிகளின் புழக்கம்
கடந்த மே மாதத்தில் மட்டும் நாளாந்தம் 650 சுற்றுலாப்பயணிகள் வருகைதந்த நிலையில் தற்போது அந்த எண்ணிக்கை 1,600 ஆக உயர்ந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த சுற்றுலாப்பயணிகள் வருகை அதிகரிப்பால் நாட்டில் அந்நியசெலாவணிகளின் புழக்கம் பெருகுவது குறிப்பிடத்தக்கது.
சுற்றுலாத்துறையில் வீழ்ச்சி
கடந்த இரண்டு ஆண்டுகளில் சுற்றுலாப்பயணிகளின் வருகை சடுதியாக வீழ்ச்சியடைந்திருந்தது.
உலகளாவில் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனாத்தொற்றுக்கள் மற்றும் இலங்கையில் ஏற்பட்ட அரசியல் பொருளாதார நெருக்கடி போன்றன சுற்றுலாத்துறையை கடுமையாக பாதித்திருந்தது.
இதனால் இலங்கை மத்திய வங்கியின் கையிருப்பு வெகுவாகக் குறைவடைய தொடங்கியது.
ரணிலுக்கு கிடைத்த வாய்ப்பு
இந்நிலையில், நாட்டில் ஏற்பட்ட அரசியல் மாற்றம் மற்றும் கொரோனாத் தொற்றின் வீழ்ச்சி போன்ற காரணங்களால் தற்போது சுற்றுலாப்பயணிகளின் வருகை அதிகரித்து வருகின்றன.
இந்த சுற்றுலாபயணிகளின் வருகையானது தற்போது நாட்டில் ஆட்சியை அமைத்துள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கம் அந்நிய செலாவணிகளை
பெறுவதற்கு சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.