லசந்த விக்ரமதுங்க படுகொலை -கைவிரித்தார் சட்டமா அதிபர்
மூத்த ஊடகவியலாளர் லசந்த விகரமதுங்க(lasantha-vikramadunga) படுகொலை வழக்கு தொடர்பில் முன்னாள் காவல்துறை மா அதிபர் ஜயந்த விக்ரமரத்னவை(Jayantha Wickramaratne) கைது செய்ய முடியாது என சட்டமா அதிபர் உச்ச நீதிமன்றத்தில் அறிவித்துள்ளார்.
ஜயந்த விக்ரமரத்னவை கைது செய்வதற்கான போதிய ஆதாரங்கள் இல்லை என சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரட்ணம்(Sanjay Rajaratnam) சார்பில் மன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொழும்பில் இருந்து இயங்கிவந்த சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்க, கடந்த 2009 ஆம் ஆண்டு கொழும்பின் புறநகரான அத்திட்டிய பகுதியில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை இடம்பெற்றுவரும் நிலையில் லசந்த விக்கிரமதுங்க கொலை வழக்கில் குற்றப் புலனாய்வுத் துறையால் தான் கைது செய்யப்படுவதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் காவல்துறை மா அதிபர் ஜயந்த விக்ரமரத்ன உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணையின் போது ஜயந்த விக்ரமரத்னவை கைது செய்வதற்கு இடைக்கால தடைவிதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குறிப்பாக இந்த சம்பவம் தொடர்பாக ஜயந்த விக்கிரமரத்னவை கைது செய்வதற்கான உடனடி காரணங்கள் எவையும் இல்லை என மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் ஆயிஷா ஜினசேன நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது.
சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் கொலை தொடர்பாக முன்னாள் காவல்துறை மா அதிபர் ஜயந்த விக்கிரமரத்னவிடம் குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தினர். விக்கிரமரத்ன உள்ளிட்ட உயர் காவல்துறை அதிகாரிகள் கடமையில் இருந்த போது காணாமல் போன விக்கிரமதுங்கவின் குறிப்பு புத்தகம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அவரை கைது செய்வதற்கு போதிய ஆதாரங்கள் இல்லை என சட்டமா அதிபர் தெரிவித்துள்ளதுடன், அவரை கைது செய்வதை தடுப்பதற்கும் வழி ஏற்படுத்தியுள்ளார்.