லசந்த விக்கிரமதுங்க படுகொலை விசாரணைகளை முன்னெடுக்க சர்வதேச ஊடக சுதந்திர அமைப்புக்கள் தீர்மானம்
சிறிலங்காவின் தற்போதைய அரச அதிபரும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோட்டாபய ராஜபக்ஸவை விமர்சித்து வந்த நிலையில், படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவின் (Lasantha Wickramasinghe )படுகொலை தொடர்பான விசாரணைகளை சர்வதேச ஊடக சுதந்திர அமைப்புக்கள் ஒன்றிணைந்து முன்னெடுக்க தீர்மானித்துள்ளன.
ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயத்தை நிறுவி, அதனூடாக ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை தொடர்பான விசாரணைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச ஊடக சுதந்திர அமைப்புக்கள் ஒன்றிணைந்து ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பான மக்கள் நீதிமன்றம் ஒன்றை நிறுவி, 2009 ஆண்டில் தென்னிலங்கையில் படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை குறித்த விசாரணைகளை முன்னெடுப்பதற்குத் தீர்மானித்துள்ளன.
சர்வதேச ரீதியில் இடம்பெற்ற ஊடகவியலாளர்களின் படுகொலைகள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்காக, ஊடக சுதந்திரத்தை உறுதிப்படுத்துவதை இலக்காகக்கொண்டு சர்வதேச மட்டத்தில் இயங்கிவரும் 3 முன்னணி அமைப்புக்கள் ஒன்றிணைந்து, ஊடகவியலாளர்களின் படுகொலை வழக்குகள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்கவும் அதனுடன் தொடர்புடைய அரசாங்கங்களைப் பொறுப்புக்கூறச்செய்வதற்காகவும் 'மக்கள் தீர்ப்பாயத்தை' நிறுவியுள்ளன.
அதன்படி வரையறுக்கப்படாத சுதந்திர ஊடகம் (Free Press Unlimited), எல்லைகளற்ற ஊடகவியலாளர்கள் அமைப்பு (Reporters Without Borders) மற்றும் ஊடகவியலாளர்களைப் பாதுகாப்பதற்கான அமைப்பு (Committee to Protect Journalists) ஆகிய மூன்று சர்வதேச அமைப்புக்கள் இணைந்து 'ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயம்' என்ற கட்டமைப்பை உருவாக்கியிருக்கின்றன.
ஊடகவியலாளர்களுக்கு எதிரான மீறல்கள் தொடர்பில் விழிப்புணர்வை ஏற்படுத்துதல், அவைதொடர்பான ஆதாரங்களைத் திரட்டுதல் மற்றும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு ஆதரவு வழங்குவதுடன் அவர்களுடைய கதைகளைக் கேட்டறிந்து பதிவுசெய்தல் ஆகியவற்றின் ஊடாக குற்றமிழைத்த அரசாங்கங்களை சர்வதேச சட்டங்களுக்கு அமைவாகப் பொறுப்புக்கூறச்செய்யும் வகையிலேயே இந்த மக்கள் தீர்ப்பாயத்தின் செயற்பாடுகள் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி ஊடகவியலாளர்களின் படுகொலை தொடர்பான மக்கள் தீர்ப்பாயம் முதலில் ஊடகவியலாளர்களான லசந்த விக்ரமதுங்க, மிக்குவேல் ஏஞ்சல் லோபேஸ் வெலஸ்கோ மற்றும் நபீல் அல்-ஷர்பாஜி ஆகியோரின் படுகொலைகள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கு தவறியமைக்காக சிறிலங்கா, மெக்சிகோ மற்றும் சிரியா ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள் மீது குற்றஞ்சுமத்தியிருப்பதுடன் இதுபற்றிய விசாரணைகளை முன்னெடுப்பதற்கும் தீர்மானித்துள்ளன.
இந்தச் சம்பவங்கள் தொடர்பான முதற்கட்ட வழக்கு விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் மாதம் இரண்டாம் திகதி நடைபெறவிருப்பதுடன், மனித உரிமைகள் குறித்த பிரபல சட்டத்தரணியான அல்முடெனா பெர்னாபேயூ இந்த முதற்கட்ட வழக்கு விசாரணைகளை வழிநடத்துவார் என்றும் கூறப்பட்டுள்ளது.
2009ஆம் ஆண்டு தென்னிலங்கையில் வைத்து சுட்டுப்படுகொலை செய்யப்பட்ட சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியரான லசந்த விக்கிரமதுங்க, அப்போதைய மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்தில் இடம்பெற்ற போர் விமானக் கொள்வனவில் ஏற்பட்ட மோசடி பற்றி பகிரங்கமாக எழுதியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.