மோடிக்கான கடிதம் - கூட்டமைப்பின் நிலைப்பாடு வெளியானது
இந்தியாவிடம் கோரவுள்ள அரசியல் தீர்வு தொடர்பான விடயங்கள் பகிரங்கமானது அல்லவென இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இந்தியப் பிரதமருக்கான கடிதத்தில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியுடன் முரண்படும் விடயங்கள் குறித்து எதுவும் பகிரங்கப்படுத்தப்பட மாட்டாது எனவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே இன்று நேரடியாக சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
அதிபர் ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவிற்கான விஜயத்திற்கு முன்னராக நரேந்திர மோடிக்கு கடிதம் அனுப்புவது தொடர்பாகவும் இந்திய உயர்ஸ்தானிகருடன் இரா.சம்பந்தன் கலந்துரையாடியுள்ளார்.
குறித்த கடிதத்தை உரிய நேரத்தில் கையளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஐ.பி.சி தமிழுக்கு தெரிவித்தார்.
கடிதத்தின் இறுதி வடிவம்

மோடிக்கான கடிதம் இறுதி செய்யப்பட்டுள்ள போதிலும் சில திருத்தங்களை செய்வதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இரா.சம்பந்தனுடன் கலந்துரையாடி இந்தக் கடிதத்தின் இறுதி வடிவம் தயாரிக்கப்படும் எனவும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவின் இந்தியாவிற்கான விஜயம் மற்றும் நரேந்திர மோடியுடனான சந்திப்பு உள்ளிட்ட விடயங்கள் குறித்து இந்திய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பில் இரா.சம்பந்தன் கலந்துரையாடியுள்ளார்.
இரண்டு தலைவர்கள் சந்திக்கும் போது 13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை மாத்திரம் நடைமுறைப்படுத்துமாறு கோருவது பொருத்தமற்றது என்பதே தமது நிலைப்பாடு எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்த அணுகல்முறையின் அடிப்படையிலேயே இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேயுடனான சந்திப்பு இருந்தது எனவும் மாவை சேனாதிராஜா குறிப்பிட்டுள்ளார்.
இந்திய மற்றும் சிறிலங்கா தலைவர்களுக்கு இடையிலான பேச்சின் போது எவ்வாறான விடயங்கள் இடம்பெற வேண்டும் என்ற விடயத்தை, கவனமான அணுகுமுறையுடனேயே முன்வைக்க வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
இந்தியாவிடம் அரசியல் தீர்வு

இதேவேளை 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு மட்டும் நாம் இந்தியாவிடம் கோர முடியாது என தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுத் தலைவரான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
தமிழ் மக்களின் ஆணை இலங்கைத் தமிழ் அரசுக் கட்சிகே உள்ளது எனவும் அதனை நாம் மீற முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இரா.சம்பந்தனுடன் நடத்திய சந்திப்பில் அவர் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியதாக இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் கூறியுள்ளார்.
13 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை தாண்டி - கூட்டுறவு சமஷ்டி தொடர்பாக இந்தியாவே பிரஸ்தாபித்துள்ளது எனவும், இவ்வாறு இருக்கும் போது 13ஆவது திருத்தத்தை மாத்திரம் முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் என்று மக்கள் ஆணையுள்ள தாம் கோர முடியாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஏனைய கட்சிகள் எவ்வாறு வேண்டுமானாலும் செயற்படலாம் என்ற போதிலும், மக்கள் ஆணையுள்ள தாம் அவ்வாறு செயற்பட முடியாது என்று திட்டவட்டமாக சம்பந்தன் குறிப்பிட்டார் என எம்.ஏ. சுமந்திரன் மேலும் தெரிவித்தார்.