நுவரெலியாவில் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச்செல்லப்பட்ட வாக்குப் பெட்டிகள்
நாளை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் நுவரெலியா காமினி சிங்கள வித்தியாலயத்திலிருந்து வாக்குசாவடிகளுக்கு காவல்துறையினரின் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் 300 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 610,117 பேர் வாக்களிக்க தகுதிபெற்றுள்ளனர்.
பாதுகாப்பு அதிகாரிகள்
நுவரெலியா மாவட்டத்தில் நுவரெலியா மாநகர சபை, தலவாக்கலை லிந்துலை மற்றும், அட்டன், டிக்கோயா ஆகிய நகர சபைகளுக்கும், வலப்பனை, ஹங்குரன்கெத்த, நுவரெலியா, அம்பகமுவ, கொத்மலை மற்றும் கொட்டகலை, அக்கரபத்தனை, நோர்வூட், மஸ்கெலியா ஆகிய பிரதேச சபைகளுக்குமான 540 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
வாக்களிப்பு நிலையங்களில் 6352 பேர் கடமையாற்றவுள்ளதோடு, பாதுகாப்புக்காக பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினருமாக 1500 பேர் கடமையில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர்.
12 சபைகளுக்கும், 300 உறுப்பினர்களை தெரிவு செய்வதற்கு 2485 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடதக்கது.
பதுளை மாவட்டம்
நாளை இடம்பெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு பதுளை மாவட்டத்துக்கான வாக்குப்பெட்டிகள் அனைத்தும் பதுளை மத்திய கல்லூரி மற்றும் தர்மதூத கல்லூரியிலிருந்து வாக்குசாவடிகளுக்கு காவல்துறையினரின் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
பதுளை மாவட்டத்தில் 18 சபைகளுக்கும், அங்கீகரிக்கப்பட்ட 14 கட்சிகள் மற்றும் 11 சுயேட்சைக் குழுக்களுமாக வேட்பாளர்கள் போட்டியிடுவதோடு, 576 வாக்களிப்பு நிலையங்களில் வாக்காளர்கள் வாக்களிக்கவுள்ளனர்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
