இலங்கையில் திரவ பால் உற்பத்தியை ஊக்குவிக்கும் அரசாங்கம்
இலங்கையில் திரவ பால் உற்பத்தியை ஊக்குவிக்க அரசாங்கம் குறிப்பிட்ட வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்தியுள்ளதாக கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவித்தார்.
நாட்டு மக்கள் திரவப் பால் உற்பத்தி மற்றும் பாவனையில் ஆர்வம் காட்டுவதாகவும், திரவப் பால் தொழிலை ஊக்குவிப்பதன் மூலம், பால் பண்ணையாளரின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவும், நாட்டு மக்களின் புரதத் தேவையைப் பூர்த்தி செய்யவும் முடிந்துள்ளதாகவும் அமைச்சர் டி.பி. ஹேரத் தெரிவித்தார்.
அதிபர் ஊடக மையத்தில் நேற்று (07) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட கால்நடை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் டி.பி ஹேரத் இதனைக் குறிப்பிட்டார்.
உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான வேலைத்திட்டம்
இதன்போது அவர் மேலும் தெரிவித்தாவது, கடந்த காலங்களில் விவசாய அமைச்சுக்கு பல பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அந்த நெருக்கடிக்கு முகங்கொடுத்து நாட்டு மக்களின் உணவுத் தேவையைப் பூர்த்தி செய்வதற்கான வலுவான வேலைத்திட்டத்தை அதிபர் ஆரம்பித்தார்.
கால்நடைத் துறையில், நாட்டின் பால் மற்றும் புரதத் தேவைகளை முதன்மையாகப் பூர்த்தி செய்வதே எங்கள் நோக்கமாகும். 2021 ஆம் ஆண்டில், நம்மால் 712 மில்லியன் லீட்டர் பால் மட்டுமே உற்பத்தி செய்ய முடிந்தது.
மீதியை வெளி நாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. அதற்காக அரசாங்கம் 58 பில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது. இது பொருளாதார ரீதியாக எமக்கு பெரும் சவாலாக அமைந்துள்ளது.
சுங்கத் தீர்வைகள் வழங்கப்பட்டு, கால்நடைத் தீவனம் மற்றும் மருந்துகளை இறக்குமதி செய்வதற்கான வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது. விலங்குகள் இறக்குமதிக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் செலவுகளை குறைக்க முடியும் என நம்புகிறோம்.
விவசாய அமைச்சு தற்போது புல்லை பயிராக பயிரிடும் திட்டமொன்றை முன்னெடுத்து வருகிறது.
அதற்காக செயல்படுத்தப்படும் திட்டத்தில், பங்கெடுக்கின்ற ஒரு விவசாயிக்கும் தலா 20,000 ரூபாய் என்ற அடிப்படையில் அரசாங்கத்தினால் உதவித்தொகை வழங்கப்படவுள்ளது.
இலங்கையின் பாரம்பரிய கால்நடைகளிடத்திலிருந்து பெறக்கூடிய பாலின் அளவு குறைவாகவே காணப்படுகின்றது. இந்த பிரச்சினைக்கு, விலங்குகளின் மரபணுச் சக்தியை அதிகரிப்பதற்கான திட்டத்தை மேம்படுத்த வேண்டும்.
திரவப் பால் உற்பத்தி
அத்தோடு அவற்றின் கலப்பு முறை இனப்பெருக்கத்தின் ஊடாக வலுவான கால்நடைகளை உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதனால் நமது போஷாக்குத் தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ளவும் முடியும்.
தற்போதும் திரவப் பால் உற்பத்தி மற்றும் பாவனைக்கான உந்துதல் மக்கள் மத்தியில் காணப்படுகின்றது. இதுபோன்ற பால் சார்ந்த உற்பத்திகள் ஆரம்பிக்கப்படுவதால் உற்பத்தியாளர்களுக்கும் இலாபம் கிட்டும்.
இதனால் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரம் மேம்படுகின்ற அதேநேரம், நாட்டின் புரோட்டின் தேவையையும் நிவர்த்திக்கூடிய பாரிய வேலைத்திட்டமாக முன்னெடுக்க வேண்டும்.
கடந்த காலங்களில் விவசாய துறையின் வளர்ச்சிக்காக ஆரம்பிக்கப்பட்ட வேலைத்திட்டங்களையும் தொடர்ச்சியான முன்னெடுத்துச் செல்ல தீர்மானிக்கப்பட்டுள்ளது” - என்றார்.
