லண்டனில் காவல்துறையிடமிருந்து தப்பிச்சென்ற தமிழர்- பொதுமக்களுக்கு எச்சரிக்கை
லண்டனில் தமிழரொருவர் காவல்துறையின் பாதுகாப்பிலிருந்து தப்பிச்சென்றுள்ளதாக பொதுமக்களுக்கு காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
கிழக்கு லண்டனில் காப்பகம் ஒன்றிலிருந்து மார்ச் 20 ஆம் திகதி அழைத்துச்செல்லப்பட்ட நிலையில் 35 வயதான பாலசங்கர் நாராயணன் என்ற சந்தேகநபர் லண்டன் இல்ஃபோர்ட் பகுதியில் தப்பிச்சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பொதுமக்களிடம் உதவி கோரும் காவல்துறை
சந்தேகநபர் தப்பிச்சென்ற போது நீல நிற டிராக்சூட்டில் இருந்ததாகவும், இவர் மிகவும் ஆபத்தானவர் என்பதனால் அவரை யாரும் நெருங்க வேண்டாம் எனவும் காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் சந்தேகநபரை அடையாளம் காண நேர்ந்தால், அவரை நெருங்காமல் 999 இலக்கத்திற்கு தகவல் தெரிவிக்குமாறும் காவல்துறையினர் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்.
குறிப்பாக நியூஹாம், கிரீன்ஃபோர்ட், ஹேமர்ஸ்மித், ஹைகேட் மற்றும் இல்ஃபோர்ட் பகுதிகளில் அவருக்கு அடைக்கலம் வழங்கப்படலாம் எனவும், நாட்டில் அவர் எங்கு வேண்டுமானாலும் மறைவாக இருக்கலாம் எனவும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
ரயில் சேவையை பயன்படுத்தி தப்பிக்க முயற்சி
இந்த நிலையில், அவரது இருப்பிடத்தை கண்டறிய காவல்துறையினர் தீவிர நடவடிக்கையை முன்னெடுத்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
மேலும், பாலசங்கர் நாராயணன் ரயில் சேவையை பயன்படுத்தி தப்பிக்க முயற்சி மேற்கொள்ளலாம் எனவும், ஊழியர்கள் மற்றும் பயணிகள் அவரை அடையாளம் காண நேரிட்டால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
