பிலிப்பைன்ஸ் அதிபரை சந்தித்த ரணில் விக்ரமசிங்க! கலந்துரையாடப்பட்ட முக்கிய விடையங்கள்
நட்புறவு
ஆசிய பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதன் மூலம் இலங்கைக்கும் பிலிப்பைன்ஸிற்கும் இடையிலுள்ள நீண்டகால நட்புறவை மேலும் வலுப்படுத்த முடியுமென அதிபர் ரணில் விக்ரமசிங்க அவர்கள் தெரிவித்துள்ளார்.
உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டு பிலிப்பைன்ஸ் சென்றுள்ள ரணில் விக்ரமசிங்க, அந்நாட்டு அதிபர் பேர்டினன்ட் ஆர். மார்க்கஸ்ஸை ( Ferdinand R. Marcos) இன்று (29) காலை மணிலாவில் சந்தித்தபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மணிலாவில் உள்ள மலாக்கனங் மாளிகைக்கு வருகை தந்த அதிபர் விக்ரமசிங்கவுக்கு பிலிப்பைன்ஸ் அதிபர் வரவேற்பு அளித்தார்.
புதிய அணுகு முறைகள்
இருநாட்டுத் தலைவர்களும் தமது நட்புடன் கூடிய உரையாடலைத் தொடர்ந்து இருதரப்பு கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.
இச்சந்திப்பின்போது இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கிடையில் உள்ள நீண்ட கால இருதரப்பு நட்புறவை புதிய அணுகு முறைகள் மூலம் மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
இந்தச் சந்திப்பில், தேசிய பாதுகாப்பு தொடர்பான அதிபரின் சிரேஷ்ட ஆலோசகரும் அதிபரின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன, பிலிப்பைன்ஸ்கான இலங்கைத் தூதுவர் ஷோபினி குணசேகர ஆகியோருடன் இலங்கையிலிருந்து சென்ற பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.