"அச்சமின்றி மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்த வாரீர்" அரியநேந்திரன் அழைப்பு(காணொளி)
மாவீரர் தினத்தை இம்முறை எதிர்வரும் 27 ஆம் திகதி திங்கட்கிழமை மிகவும் உணர்வு பூர்வமாக அனுஸ்டிப்பதற்குரிய ஏற்பாடுகள் அனைத்தும் தற்போதிருந்தே இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், மட்டக்களப்பு மாவட்டம் மாவடி முன்மாரியில் அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லம் துப்பரவு செய்யப்பட்டு, சிவப்பு, மஞ்சள் கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு வருகின்றன.
அங்குள்ள தற்போதைய நிலைமை தொடர்பில் முன்னாள் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பாக்கியச்செல்வம் அரியநேந்திரன் கருத்துத் தெரிவித்துள்ளார்.
மாவீரர்களுக்கு அஞ்சலி
“கடந்த காலத்தில் நாம் மிகவும் இக்கட்டான சூழலிலும், பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும், மாவீரர் தினத்தை அனுஸ்டித்து வந்தோம். இந்நிலையில் இவ்வருடம் எந்தவித அச்சுறுத்தல்களும் இல்லாத சூழல் உள்ளது.

எனினும் இம்முறை மாவீரர் நாளை அனுஸ்டிப்பதற்கு காவல்துறையினர் தடையுத்தரவைப் பெறுவதற்கு முயற்சித்தபோதும், அதனை நீதிமன்றங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை.
கடந்த காலங்களில் இவ்வாறான நிகழ்வுக்கு எனக்குத் தடையுத்தரவு வந்தபோதும் ஏனையவர்கள் இங்குவந்த மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்திச் சென்ற வரலாறுகள் உள்ளன.
தமிழ் மகனினது கடமை
அதேவேளை கடந்த காலத்தில் நான் தனியாகவே சென்று சிரமதானப்பணியில் ஈடுபட்டு விளக்கேற்றிவிட்டுச் சென்றிருந்தேன். வடக்கு கிழக்கிலே 33 துயிலுமில்லங்கள் அமைந்துள்ளன.

அதில் கிழக்கு மாகாணத்தில் 9 துயிலுமில்லங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 துயிலுமில்லங்களும், திருகோணமலையில் 4 துயிலுமில்லங்களும், அம்பாறையில் ஒரு துயிலுமில்லமும் அமைந்துள்ளன.
எனவே இம்முறை மக்கள் அனைவரும் எந்தவித அச்சங்களுமின்றி எதிர்வரும் 27 ஆம் திகதி மாலை 06.05 மணிக்கு உங்களுக்குப் பக்கத்திலே அமைந்துள்ள மாவீரர் துயிலுமில்லத்திற்குச் சென்று எமது மண்ணுக்காகவும், மக்களுக்காகவும் போராடி ஆகுதியான மாவீரர்களை சுடர் ஏற்றி, கண்ணீர் வணக்கம் அஞ்சலி செலுத்துவது ஒவ்வொரு தமிழ் மகனினதும் கடமையாக இருக்கின்றது.
எனவே இந்நாளை ஒரு புனித நாளாகக் கொண்டு அனைவரும் ஒன்றிணைந்து அஞ்சலி செலுத்த வருமாறு அழைப்பு விடுக்கின்றோம்” என அவர் இதன்போது தெரிவித்தார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



அன்னை பூபதி! ஈழ நிலத்தின் அன்னையர்களின் குறியீடு
6 நாட்கள் முன்