தொடர்ந்தும் மகிந்தவின் குற்றங்களை அம்பலப்படுத்தும் பொன்சேகாவின் கருத்துக்கள்
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச (Mahinda Rajapaksa) தொடர்பில் முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா (Sarath Fonseka) தொடர்ந்தும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்வும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்சவும் 2009 இல் விடுதலைப் புலிகளுக்கு எதிரான இராணுவ வெற்றியைத் தாமதப்படுத்த முயற்சித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.
அந்தவகையில் 2009 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச விடுதலைப் புலிகளுடன் போர் நிறுத்தம் செய்து பிரபாகரனுக்கும் ஏனைய தலைவர்களுக்கும் தப்பிச் செல்வதற்கான வாய்ப்பை வழங்க முயற்சித்ததாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
பழிவாங்கிய ராஜபக்சர்கள்
அத்துடன் இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்டப் போரின் போது மகிந்த ராஜபக்ச கொண்டுவந்த திட்டத்தின் விளைவாக 500 இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
மகிந்த ராஜபக்ச அரசாங்கம் தன்னை சிறையில் அடைத்ததாகவும், தன்னுடன் நெருக்கமாக இருந்த ஜெனரல்கள், பிரிகேடியர்கள், மேஜர்கள், கர்னல்கள் உட்பட 35 சிரேஸ்ட இராணுவ அதிகாரிகளை ஓய்வூதியமின்றி இராணுவ சேவையிலிருந்து நீக்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
அத்துடன் யுத்தத்தை வெற்றி கொண்ட உயர் இராணுவ அதிகாரிகள் அனைவரும் ராஜபக்சர்களால் பழிவாங்கலுக்கு உட்படுத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
இந்த நிலையில் சேவையிலிருந்து நீக்கப்பட்டவர்களுக்கு வெளியில் கூட தொழிலைத் தேடிக் கொள்ள முடியாத சூழல் உருவாக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
சிறைத் தண்டனை
இதேவேளை மகிந்த ராஜபக்ச 2010 ஆம் ஆண்டில் ஆட்சியில் இருந்தபோது நிகழ்த்தியதாகக் கூறப்படும் பெரும் அளவிலான ஊழலுக்காக, அவருக்கு 400 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட வேண்டும் எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டிருந்தார்.
மகிந்தவைப் பற்றி இவ்வாறு கருத்து வெளியிட்ட சரத்பொன்சேகா, ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) தன்னை அரசியலுக்குள் கொண்டுவந்தவர் எனவும் அவருடைய நிலை தனக்கு வருத்தமளிப்பதாகவும் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |

