மகிந்தவும் நாமலும் வெளிவந்த பின்னணியில் ரணில்! அம்பலமான தகவல்
தலைமறைவாகியிருந்த முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோர் வெளியில் வந்துள்ளனர். வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருந்த யோஷித ராஜபக்சவும் மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.
இவை அனைத்திற்கும் காரணம் ரணில் விக்ரமசிங்கவே என நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
முஜிபுர் ரஹ்மான் தொடர்ந்தும் தெரிவிக்கையில்
பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்றிருக்காவிட்டால் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ச பதவி விலகியிருப்பார்.
நாட்டில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு புதிய அரசாங்கம் அமைக்கப்பட்டு சர்வதேச உதவிகளும் கிடைக்கப் பெற்றிருக்கும். இவர் பதவியேற்றதன் காரணமாகவே அரச தலைவரின் பதவி விலகல் தீர்மானம் தாமதமடைந்தது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதவியேற்ற நாள் முதல் நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பில் தெளிவுபடுத்திக் கொண்டிருக்கின்றாரே தவிர , நெருக்கடிகளிலிருந்து மீள்வதற்கான எந்தவொரு தீர்வினையும் முன்வைக்கவில்லை. மக்களின் நலனுக்காக இடைக்கால அரசாங்கத்தை அமைப்பதாக்க கூறிய அவர் 20இற்கும் அதிக அமைச்சர்களை நியமித்திருக்கின்றார்.
அவர்கள் அனைவரும் உத்தியோகபூர்வ இல்லங்களிலேயே வசிக்கின்றனர். அதற்கான செலவுகளை அரசாங்கமே செய்து கொண்டிருக்கிறது. முன்னர் பதவி வகித்த அதே நபர்களுக்கு அமைச்சு பதவியை வழங்கி , பிரதமர் ரணில் விக்ரமசிங்க வேறொரு அரசியல் பாதையில் பயணித்துக் கொண்டிருக்கின்றார். மாறாக மக்கள் நலனுக்காக எதனையும் செய்யவில்லை.
தாமதமான கோட்டாபயவின் பதவி விலகல்
ரணில் விக்ரமசிங்கவின் பதவியேற்பினால் கோட்டாபயவின் பதவி விலகல் தாமதடைந்துள்ளது. தலைமறைவாகியிருந்த முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச மற்றும் முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்ச ஆகியோர் வெளியில் வந்துள்ளனர்.
வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருந்த யோஷித ராஜபக்சவும் மீண்டும் நாடு திரும்பியுள்ளார்.
இவை அனைத்திற்கும் காரணம் ரணில் விக்ரமசிங்கவே.
நாடு மேலும் வீழ்ச்சியடைந்து செல்வதற்கு அவரே பொறுப்பு கூற வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
