வங்காள விரிகுடாவில் உருவாகவுள்ள காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் : விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் எதிர்வரும் ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வங்காள விரிகுடா மற்றும் இந்தியப் பெருங்கடல் பகுதிகளில் அடிக்கடி காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் உருவாகி, அவை வலுப்பெற்று சூறாவளி மற்றும் கனமழைக்கு வழிவகுக்கும் என முன்னாள் புவியியல் துறை பேராசிரியர் அண்டனி நோர்பர்ட் தெரிவித்துள்ளார்.
அத்துடன் எதிர்வரும் செப்டம்பர் மற்றும் ஒக்டோபர் மாதங்களில் நாட்டின் காலநிலை மற்றும் மழைப்பொழிவில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்படக்கூடும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஊடகமொன்றின் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அதிகளவு வெப்பநிலை
அவர் மேலும் தெரிவித்ததாவது, தற்போது இலங்கையில் தென்மேற்கு பருவக்காற்று நிலவி வருகின்ற போதிலும், அதன் தாக்கம் காரணமாக வடகிழக்கு மற்றும் தென்பகுதிகளில் மட்டுமே மழைப்பொழிவு கிடைத்து வருகின்றது.
அதேவேளை, வழக்கமாக வடகிழக்குப் பகுதிகளில் நிலவும் வறட்சிக்கு மாறாக, இம்முறை அந்தப் பகுதிகளில் அதிகளவு வெப்பநிலை பதிவாகி வருகின்றது.

படிம எரிபொருட்களின் அதிகப்படியான பயன்பாடு மற்றும் பசுமைக்குடில் வாயுக்களின் அதிகரித்த உமிழ்வு ஆகியவை புவி வெப்பமடைதலுக்கு முக்கிய காரணிகளாக உள்ளது.
புவி வெப்பமடைதலின் பின்னணியில் எல் நினோ (El Niño) போன்ற காலநிலை காரணிகளின் தாக்கம் அதிகரித்துள்ளதுடன், இதன் விளைவாக வழக்கமாக மிதமான வெப்பநிலை நிலவ வேண்டிய காலப்பகுதிகளிலும் 37 முதல் 38 டிகிரி செல்சியஸ் வரையான அதிக வெப்பநிலை பதிவாகி வருகின்றது.
இதனால் நீர்நிலைகள் வற்றுவதுடன், விலங்குகள் மற்றும் விவசாயத் துறையும் பாதிக்கப்படக்கூடும்” என தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |