தமிழ் மக்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலைபெற உதவுங்கள் - மேற்குவங்க முதலமைச்சரிடம் கோரிக்கை
இலங்கைத் தமிழ் மக்கள் அடிமைத் தனத்திலிருந்து விடுதலை பெற உதவ வேண்டும் என மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பான்ர்ஜியிடம் சமதா கட்சி கோரிக்கை முன்வைத்துள்ளது.
இலங்கையில் இடம்பெற்ற போரின் இறுதிக் கட்டத்தில் 2009 இல் மாத்திரம் இலட்சக்கணக்கான அப்பாவித் தமிழர்கள் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர்.
ஆயிரக்கணக்கான தமிழ் பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதுடன், பல இளைஞர்கள் இரக்கமின்றி துன்புறுத்தப்பட்டு உடல் ஊனமாக்கப்பட்டமை மற்றும் இளம் பெண்கள் கணவனை இழந்து விதவைகளாக்கப்பட்டமை குறித்து சமதா கட்சி மேற்குவங்க முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளது.
போருக்குப் பின்னரும், தமிழர்கள் சிங்கள அரசாங்கங்களால் கடுமையாக ஒடுக்கப்படுவதாக குறிப்பிட்டுள்ள சமதா கட்சி, வலுக்கட்டாயமாக தமிழர்களின் நிலம் மற்றும் குடியிருப்புகள் இராணுவமாயமாக்கபடுகின்றது எனவும் கூறியுள்ளது.
இந்த நிலையில், அநீதிக்கு எதிராகப் போராடும் உங்களைப் போன்ற உயர்ந்த தலைவர் இலங்கைத் தமிழர்கள் அடிமைத்தனத்திலிருந்து விடுதலை பெற உதவ வேண்டும் குறித்த கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் தெளிவுபடுத்துவதற்கு மேற்கு வங்க மாநில முதலமைச்சரை சந்திப்பதற்கும் சமதா கட்சி சார்பில் அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் கட்சியின் தேசிய தலைமை பொதுச் செயலாளர் என்.ஏ.கோன் கோரிக்கை முன்வைத்துள்ளார்.