ஹட்டன் பகுதியில் 4 வயது சிறுமிக்கு மது அருந்த கொடுத்த நபர் கைது
ஹட்டன் (Hatton) - மஸ்கெலியா (Maskeliya) காவல் பிரிவிற்குட்பட்ட சாமிமலை ஓல்ட்டன் தோட்டத்தில் 4 வயது சிறுமிக்கு மது அருந்தக் கொடுத்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று(10.07.2024) இடம்பெற்றுள்ளது. இதன்போது, குறித்த பிள்ளையின் தாய் மாமனே குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குழந்தையின் தாய் குடும்ப வறுமை காரணமாக 18 மாதங்களுக்கு முன்பு சவூதி அரேபியாவுக்கு பணிக்குச் சென்றுள்ளார். இவர்கள் உலப்பனை பகுதியில் வசிப்பவர்கள் எனவும் தாய் சவூதி அரேபியா சென்ற போது 9 வயது மகன் மற்றும் 4 வயது மகளையும் சாமிமலை பகுதியில் உள்ள ஓல்ட்டன் தோட்டத்தில் தனது தாய் வீட்டில் விட்டு சென்றுள்ளார்.
விளக்கமறியல்
இந்த நிலையில், குழந்தைகள் பாட்டியின் வீட்டில் இருந்த வேளை தாய் மாமன் அடிக்கடி குழந்தைகளை பார்க்க வந்து இவ்வாறு மதுபானத்தை பருக்கி உள்ளார்.

இதையடுத்து, சம்பவம் தொடர்பில் சிறுமியின் 9 வயதுடைய சகோதரன் உலப்பனை காவல் நிலையத்திற்கு வழங்கிய தகவலின் படி, நேற்று(10) மாலை மஸ்கெலியா காவல்துறையினரால் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு, கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியபோது நீதவான் சந்தேக நபரை எதிர்வரும் 17ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |