மட்டக்களப்பில் சினிமா பாணியில் திருட்டு: மூன்று மோட்டார் சைக்கிள்களுடன் சிக்கிய இளைஞர்
மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சத்துருக்கொண்டான் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த கைது நடவடிக்கை நேற்று (19-07-2026) இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், குறித்த நபர் காத்தான்குடி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் வாங்கி விற்பனை செய்யும் கடை ஒன்றுக்குக் கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் சென்று, அங்கு விற்பனைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை வாங்குவதாகவும் அதைக் ஓட்டிப் பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளைக் கடை உரிமையாளர் குறித்த நபரிடம் கொடுத்துள்ளார்.

பின்பு குறித்த நபர் மோட்டார் சைக்கிளை அங்கிருந்து எடுத்துக்கொண்டு மட்டு திருகோணமலை வீதியில் உள்ள வீதி சமிக்கை விளக்குக்கு அருகில் நிறுத்தியுள்ளார்.
இதன்பின்பு, இணையத்தளத்தில் மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு என விளம்பரப்படுத்திய கொக்கட்டிச்சோலை பகுதியைச் சேர்ந்த ஒரு நபரைத் தொடர்புகொண்டு, அந்த மோட்டார் சைக்கிளை வாங்குவதாகவும் உடன் குறித்த வீதி சமிக்கை விளக்குக்கு அருகில் வருமாறு அழைத்துள்ளார்.
வாகரையில் விற்பனை
இதனைத் தொடர்ந்து மோட்டார் சைக்கிளை விற்பனை செய்யும் நபர் குறித்த பகுதிக்கு வந்ததும், அவரிடம் அந்த மோட்டார் சைக்கிளை ஓட்டிப் பார்க்க வேண்டும் எனத் தெரிவித்து காத்தான்குடியில் இருந்து ஓட்டிப் பார்ப்பதாகத் திருடி வந்த மோட்டார் சைக்கிளை அவரிடம் கொடுத்துவிட்டு குறித்த நபரின் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று வாகரையில் விற்பனை செய்துள்ளார்.
இவ்வாறு 2023ஆம் ஆண்டு ஒரு மோட்டார் சைக்கிளையும் திருடி விற்பனை செய்துள்ளதாகக் காவல்துறையினரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இதனையடுத்துக் குறித்த நபரைத் கைது செய்ததுடன் திருடப்பட்ட 3 மோட்டார் சைக்கிள்களையும் மீட்டதுடன், குறித்த நபர் கடந்த காலத்தில் 8 குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டுக் கைது செய்யப்பட்டு நீதிமன்றப் பிணையில் வெளிவந்துள்ளதாகவும், இவரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
கொடிய சட்டமான PTA கொண்டுவரப்பட்டு இன்றுடன் 47 ஆண்டுகள்…
2 நாட்கள் முன்