தொல்பொருளியல் பெயர்பலகையை அகற்றிய ஒருவர் கைது!
மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருள் பெயர்ப் பலகைகளை அகற்றிய சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் மட்டக்களப்பு, கிரான் பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
சந்தேகநபர்களால் அகற்றப்பட்ட பெயர்ப்பலகைகளையும் வாழைச்சேனை காவல்துறையினர் மீட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய வாழைச்சேனை பிரதேச சபையின் தவிசாளர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ள நிலையில், அவரைக் கண்டுபிடிப்பதற்காக நான்கு காவல்துறை குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
தொல்பொருள் திணைக்களம்
தொல்பொருள் திணைக்களம் மட்டக்களப்பு மாவட்டத்தில் தொல்பொருட்கள் உள்ள இடங்களுக்கான திசைகளைக் காட்டும் வகையில் திசைப் பலகைகள் மற்றும் அறிவிப்புப் பலகைகளை நிறுவும் பணியை கடந்த நவம்பர் 3 ஆம் திகதி ஆரம்பித்திருந்தது.

அதன் பின்னர், பிரதேச சபை ஒன்றின் அதிகாரிகளினால் இப்பலகைகள் கடந்த 22 ஆம் திகதி அகற்றப்பட்டதுடன் அப்பலகைகள் கழற்றி அகற்றப்படுவதைக் காட்டும் காணொளி ஒன்று அண்மையில் சமூக ஊடகங்களில் பரவியிருந்தது. அதற்கமைய உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.
இதேவேளை, இன்று (24.11.2025) நாடாளுமன்றத்தில் இது தொடர்பில் கருத்துத் தெரிவித்த பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இதற்குப் பொறுப்பானவர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |