சாவகச்சேரியில் பாடசாலை மாணவர்களுக்கு போதைப்பொருள் விற்பனை செய்தவர் அதிரடி கைது
யாழ். (Jaffna) சாவகச்சேரி நகரில் பாடசாலை மாணவர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருள் மற்றும் போதை மாத்திரை விற்பனையில் ஈடுபட்டு வந்த முஸ்லிம் வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபர் இன்று (10) சாவகச்சேரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சாவகச்சேரி நகர் பகுதியில் பாடசாலை மாணவர்கள் சிலர் போதைப்பொருள் பாவனையில் ஈடுபட்டு வருவதாக சாவகச்சேரி காவல் நிலையத்தின் கீழ் இயங்கும் போதைப்பொருள் குற்றச்செயல் தடுப்பு பிரிவின் உப காவல்துறை பரிசோதகர் தலைமையிலான குழுவினருக்கு தகவல் கிடைத்தது.
காவல்துறையினர் விசாரணை
குறித்த இரகசிய தகவல்களுக்கு அமைவாக சாவகச்சேரி நகர்ப்பகுதியில் உள்ள பிரபல பாடசாலையின் மாணவர்கள் மூவர் நேற்று இரவு கைது செய்யப்பட்டனர்.
இந்தநிலையில் அவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சாவகச்சேரி நகர்ப்பகுதியில் மரத்தளபாட திருத்தவேலை செய்யும் வர்த்தக நிலையத்தை நடத்தும் 45 வயதான முஸ்லிம் வர்த்தகர் ஒருவரிடம் இருந்து போதைமாத்திரைகள் பெற்றுக்கொள்வது தெரியவந்தது.
அதற்கமைய இன்று குறித்த வர்த்தகர் 330 போதைமாத்திரைகளுடன் கைது செய்யப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு உற்படுத்தப்பட்ட போது இவர் ஜஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என தெரியவந்துள்ளது.
அதனை தொடர்ந்து குறித்த நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் தான் ஜஸ் போதைக்கு அடிமையானவர் எனவும் போதை மாத்திரைகளை பாடசாலை மாணவர்களுக்கு விற்பதன் மூலம் கிடைக்கும் பணத்தில் ஜஸ் போதைப்பொருளை பெற்று பாவித்துவருவதாக காவல்துறையினரிடம் குறிப்பிட்டுள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
