முகமூடி அணிந்து மாணவர்களை கடத்தும் மர்மக் கும்பல்..! வசமாக மாட்டிய ஒருவர்
அம்பாறை - சாய்ந்தமருது காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பகுதியில் பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சித்த குற்றச்சாட்டில் அடையாளம் காணப்பட்ட சந்தேக நபரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
சாய்ந்தமருது காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட பிரபல பாடசாலை மாணவர்களான 11 வயது மதிக்கத்தக்க இருவரை இருவேறு சந்தரப்பங்களில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் கடத்த முயற்சிப்பதாக காவல் நிலையத்தில் இம்மாதம் முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றிருந்தன.
அதிரடி நடவடிக்கை
இதனையடுத்து சாய்ந்தமருது காவல் நிலையப் பொறுப்பதிகாரி, பிரதம காவல்துறை பரிசோதகர் எஸ்.எல்.சம்சுதீன் தலைமையிலான காவல்துறை குழுவினர் முன்னெடுத்த அதிரடி நடவடிக்கையின் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.
அத்துடன் குறித்த கடத்தல் சம்பவம் இடம்பெற்ற பகுதிகளில் உள்ள சிசிடிவி கமராக்களின் உதவிகள் மற்றும் புலன் விசாரணை முடக்கி விடப்பட்ட நிலையில், மாணவர்களை கடத்த முயற்சித்த சந்தேக நபர் கைதாகியுள்ளார்.
இவ்வாறு கைதான சந்தேக நபர் கல்முனை பகுதியைச் சேர்ந்த 27 வயதுடையவராவார்.
இது தொடர்பில் மேலும் தெரிய வருகையில்,
தலைக்கவசம் மற்றும் முகக்கவசம் ஆகியவற்றுடன் முகங்களை மூடியவாறு மோட்டார் சைக்கிளில் வந்த சந்தேக நபர்கள் மாணவர்கள் சிலரை இலக்கு வைத்து இவ்வாறான கடத்தல் முயற்சியில் ஈடுபட்டனர் என தெரிவித்து கடந்த வாரம் பல முறைப்பாடுகள் பதிவுசெய்யட்டிருந்ததுடன், சாய்ந்தமருது காவல்துறையினரும் விசாரணையினை முடக்கி விட்டிருந்தனர்.
அடையாள அணிவகுப்பு
இதற்கமைய காவல்துறையினரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணையின் போது பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டதுடன் இன்று (29) செவ்வாய்க்கிழமை கல்முனை நீதவான் முன்னிலையில் அடையாள அணிவகுப்பிற்கு உட்படுத்தப்பட்டார்.
இவ்வடையாள அணிவகுப்பின் போது அச்சந்தேக நபரை பாதிக்கப்பட்ட மாணவன் அடையாளப்படுத்தியிருந்தார்.
இதனையடுத்து குறித்த சந்தேகநபரை எதிர்வரும் டிசம்பர் 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுகிறது.