வீடொன்றின் மீது சரிந்து விழுந்த பாரிய மண்திட்டு - குழந்தை உட்பட 3 பேர் வைத்தியசாலையில் அனுமதி
மஸ்கெலியா பகுதியில் மாலை வேளையில் பெய்த கடும் மழை காரணமாக பாரிய மண்திட்டு சரிந்து வீழ்ந்து வீடு ஒன்று முற்றாக சேதமடைந்துள்ளதாக மஸ்கெலியா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
வீட்டில் வசித்து வந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 பேர் டிக்கோயா கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
குறித்த சம்பவம் மஸ்கெலியா காவல் பிரிவுக்குட்பட்ட மஸ்கெலியா காட்மோர் கிங்கோரோ பிரிவில் நேற்று (13) மாலை 6.45 மணியளவில் இடம்பெற்றுள்ளது. வீட்டின் பின்பக்கமாக இருந்த மண்திட்டே இவ்வாறு சரிந்து வீழ்ந்துள்ளது.
சம்பவத்தில் காயமடைந்த மூன்று பேரில் தாயும் மகளும் மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலையில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த அனர்த்தத்தில் இரண்டு வயது குழந்தை ஒன்றும் 32 வயது தாய் ஒருவரும், 65 வயது ஆண் ஒருவருமே காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்தனர்.
சம்பவத்தில் வீட்டில் இருந்த உடைமைகளுக்கும் சேதம் ஏற்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மஸ்கெலியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.