மட்டக்களப்பில் நகை திருட்டில் சிக்கிய 18 வயது இளைஞர்
மட்டக்களப்பில் (Batticaloa) நகை திருட்டில் ஈடுபட்ட 18 வயது இளைஞர் உட்பட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில், திருட்டுக்கு உதவியதாக இளைஞனின் நண்பன் மற்றும் திருட்டு தங்க நகைகளை வாங்கிய நகைகடை உரிமையாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த விடயத்தை மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
தங்க நகைகள்
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், மட்டக்களப்பு காவல் பிரிவைச் சேர்ந்த குறித்த இளைஞன் தாய் தந்தையை இழந்த நிலையில், அவரை அவரது உறவினர்கள் தமது வீட்டில் வைத்து ஆதரித்து படிக்கவைத்து பராமரித்து வந்துள்ளனர்.
இந்தநிலையில், தமது வீட்டில் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் திருடப்பட்டுள்ளதை உறவினர்கள் கண்டறிந்துள்ளனர். இதையடுத்து, காவல் நிலையத்தில் உறவினார்கள் முறைப்பாடு செய்த நிலையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
ஆபரண விற்பனை
முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய குறித்த இளைஞன் நகைகளை திருடியமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதனையடுத்து குறித்த இளைஞனையும் அவரது நண்பனையும் திருடிய தங்க நகைகளை சட்டவிரோதமாக வாங்கிய காத்தான்குடி பகுதியிலுள்ள தங்க ஆபரண விற்பனை நிலைய உரிமையாளரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இந்தநிலையில், இளைஞன் 16 பவுண்கள் கொண்ட எட்டு தங்க காப்புக்களை எடுத்துச் சென்று நண்பனுடன் சேர்ந்து காத்தான்குடி பிரதேசத்திலுள்ள நகைகடை ஒன்றில் அதனை விற்று பணத்தை பெற்றுள்ளார்.
ஆரம்பக்கட்ட விசாரணை
அதில் ஆறு இலச்சம் ரூபாவுக்கு மோட்டார் சைக்கிள், ஸ்மாட் ரக கையடக்க தொலைபேசி, உடைகள் மற்றும் உணவகங்களில் உணவு என வாங்கி சாப்பிட்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட மூன்று பேரும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளனர். இதையடுத்து, அவர்களை எதிர்வரும் முதலாம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக காவல்துறையினர் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |


கிழக்கில் தமிழர் இனவழிப்பு:காணாமல் போன அம்பாறை வயலூர் கிராமம் 7 மணி நேரம் முன்
