மருத்துவமனை உணவகங்கள் தொடர்பில் வெளியான அதிர்ச்சி தகவல் : அரசிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை
நாடு முழுவதும் உள்ள மருத்துவமனை உணவகங்களில் ஆரோக்கியமற்ற உணவு மற்றும் பானங்களின் விற்பனை தொடர்ந்து அதிகரித்து வருவதாக, மருத்துவர்கள் மற்றும் சிவில் உரிமைகள் நிபுணர் சங்கம் (MCPA) தங்கள் கவலைகளை எழுப்பி, இந்த வளாகங்களில் விற்கப்படும் உணவின் தரத்தை சரிபார்க்க ஒரு முறையான அமைப்பை அறிமுகப்படுத்துமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகிறது.
இது தெடார்பாக கொழும்பு ஊடகமொன்றிடம் பேசிய MCPA தலைவர் மருத்துவர் சமல் சஞ்சீவா, நோயாளிகள் குணமடைய வரும் இடங்களிலும், சுகாதார விழிப்புணர்வு முன்னுரிமையாக இருக்க வேண்டிய இடங்களிலும் சீனி, உப்பு, கொழுப்பு மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பொருட்கள் அதிகம் உள்ள சில உணவுப் பொருட்கள் மற்றும் பானங்கள் விற்கப்படுவது துயரமானது என்று கூறினார்.
தொற்று அல்லாத நோய்களைக் குறைப்பதில் முக்கிய பங்கு
"சீனிமற்றும் உப்பு உட்கொள்ளலைக் கட்டுப்படுத்துவது தொற்று அல்லாத நோய்களைக் குறைப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது. மருத்துவமனை வளாகங்களில் இது செய்யப்படாவிட்டால், நோயாளிகள் அவற்றை உட்கொள்ள வேண்டாம் என்று நாம் எவ்வாறு அறிவுறுத்த முடியும்?"
2022 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் வெளியிடப்பட்ட பல வர்த்தமானி அறிவிப்புகளை நடைமுறைப்படுத்துவதை தாமதப்படுத்த சுகாதார அமைச்சகம் மேற்கொண்டதாகக் கூறப்படும் நடவடிக்கையையும் அவர் விமர்சித்தார்.
வர்த்தமானி அறிவிப்புகளை நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும்
இந்த அறிவிப்புகள் உணவில் சீனி, உப்பு மற்றும் ஊட்டச்சத்து அளவைக் கட்டுப்படுத்துவதையும், உணவு விளம்பரங்களின் மீதான கட்டுப்பாட்டை கடுமையாக்குவதையும் நோக்கமாகக் கொண்டிருந்தன. "இந்த வர்த்தமானிகள் ஏற்கனவே மூன்று முறைக்கு மேல் தாமதமாகிவிட்டன. கடந்த காலங்களில், சில நிறுவனங்களின் அழுத்தம் காரணமாக தாமதங்கள் ஏற்பட்டன. ஆனால் இப்போது, புதிய அரசாங்கத்தின் கீழ், அவற்றை மீண்டும் ஒத்திவைப்பது ஒரு கடுமையான பிரச்சினையாகும்."
இந்தப் பிரச்சினையைக் கருத்தில் கொண்டு, அரசாங்கம் உடனடியாக இந்த வர்த்தமானி அறிவிப்புகளை மீண்டும் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டும் என்றும், பொதுமக்களுக்கு, குறிப்பாக மருத்துவமனை உணவகங்களுக்குள் என்ன வழங்கப்படுகிறது மற்றும் விற்கப்படுகிறது என்பதைக் கண்காணிக்க ஒரு முறையான ஒழுங்குமுறை அமைப்பை அறிமுகப்படுத்த வேண்டும் என்றும் மருத்துவர் சஞ்சீவ மேலும் தெரிவித்தார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
