கிவுல் ஓயா திட்டமும் இன அழிப்பு நடவடிக்கை...இதனை நிறுத்துவது தமிழ் மக்களின் கூட்டுப் பொறுப்பாகும்..!
கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பாக தெளிவுபடுத்தல் கூட்டம் கடந்த 9 ம் திகதி வெலி ஓயாவின் மகாவலி அபிவிருத்திச் சபை அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.
இக்கூட்டத்தில் பிரதி அமைச்சரும் வன்னி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான உபாலி சமரசிங்க, தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜெகதீஸ்வரன், திலகநாதன், தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான ரவிகரன், தேசியப் பட்டியல் உறுப்பினர் சத்தியலிங்கம் ஆகியோர் கலந்துக்கொண்டிருந்தனர்.
மேலும், நெடுங்கணி பிரதேச சபையின் தவிசாளர் கிருஸ்ணவேணி, நெடுங்கேணி பிரதேச சபை, கரைதுறைப் பற்று பிரதேச சபை என்பவற்றின் சில உறுப்பினர்கள் என்போருடன் வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர், முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் என்போரும், மகாவலி அபிவிருத்தி அதிகார சபையின் உத்தியோகத்தர்களும், சிங்கள கமக்கார அமைப்புக்களைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.
கிவுல் ஓயாத் திட்டம் தொடர்பான தெளிவுபடுத்தல் விளக்கக் காட்சி ஆரம்பத்தில் அதிகாரிகளினால் காண்பிக்கப்பட்டது.
விளக்கக் காட்சி
விளக்கக் காட்சி முழுவதும் சிங்கள மொழியில் இருந்தமை நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் சுட்டிக் காட்டியதை தொடர்ந்து தமிழ் மொழியிலான ஆவணமும் வழங்கப்பட்டது.
கிவுல் ஓயாத் திட்டத்துடன் சிங்கள விவசாயிகள் மட்டும் தொடர்புபடவில்லை தமிழ் விவசாயிகளும் தொடர்புபட்டிருந்தனர். ஆனால் கூட்டத்திற்கு தமிழ் கமக்கார அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் எவரும் அழைக்கப்படவில்லை.
இது ஒன்றே கிவுல் ஓயாத் திட்டம் தமிழ் மக்களின் நலன்களை பேணவில்லை என்பதை சுட்டிக்காட்ட போதுமானதாக இருந்தது.
இத்தனைக்கும் பாரம்பரிய பழந்;தமிழக் கிராமங்களான வெடிவைத்த கல்லு, கூளாங்குளம், ஈச்சங்குளம், கோவில் புளியங்குளம், காட்டுப் பூவரசங்குளம், காஞ்சுர மோட்டை என்பன பாதிப்படையக் கூடிய சூழல் உள்ளது.
இககிராமங்கள் நீரில் மூழ்க உள்ளன. இக்கிராமங்களின் 910 ஏக்கர் வயல் நிலங்கள் அபகரிக்கப்பட உள்ளன. கிவுல் ஓயாத் திட்டம் முழுக்க முழுக்க குடியேற்றப்பட்ட சிங்கள மக்களுக்காகவும், எதிர்காலத்தில் குடியேற்றப்படவிருக்கின்ற சிங்கள மக்களுக்காகவும் கொண்டுவரப்படுகின்றது.
தமிழ் மக்களைப் பாதிக்காத வகையில் கொண்டு வந்த திட்டமென்றால் கூட ஒரு நியாயம் இருக்கும். மாறாக தமிழ் மக்களின் வாழ்வாதாரம் சுற்றுச் சூழல், மரபுரிமைகள் என்பவற்றை பலிக்கடாவாக்கி கொண்டு வருகின்ற திட்டமாகவே உள்ளது.
இந்த வகையில் இதனை ஒரு இன அழிப்புத் திட்டம் எனலாம். நிலத்தை, மொழியை, பொருளாதாரத்தை, கலாச்சாரத்தை அழிக்கின்ற திட்டங்கள் எல்லாம் இன அழிப்புத் திட்டங்களே!
நீர்ப்பாசனத் திட்டங்கள் தொடர்பாக கல்லோயாத் திட்டம் தொடக்கம் பாவற்குளம் திட்டம் ஊடாக பதவியாத் திட்டம் வரை தமிழ் மக்களுக்கு நீண்ட வரலாற்று அனுபவம் இருக்கின்றது.
கிவுல் ஓயாத் திட்டம்
தமிழ் மக்கள் தங்களைத் தாங்களே ஆள்வதற்கு தகுதியான தேசிய இனமாக இருப்பதை அழிப்பதற்காகவே இத்திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.
கிவுல் ஓயாத் திட்டம் திருகோணமலை மாவட்டம், வவுனியா மாவட்டம், முல்லைதீவு மாவட்டம் என்பவற்றிற்கிடையிலான நிலத் தொடர்ச்சியை இல்லாமல் செய்யப் போகின்றது.
தாயக நிலத் தொடர்ச்சியை தடுப்பதற்காகவே வெலி ஓயா குடியேற்றத்திட்டங்களும், வவுனியா வடக்கு குடியேற்றத்திட்டங்களும் கொண்டுவரப்பட்டன. அங்கு குடியேறியவர்களுக்கு போதியளவு நீர் இல்லாமையினால் அவர்களில் ஒரு பிரிவினர் குடியேற்றங்களை விட்டு வெளியேறத் தொடங்கியுள்ளனர்.
இந்த வெளியேற்றத்தை தடுப்பதற்காகவே கிவுல் ஓயாத்திட்டம் வலிந்து கொண்டு வரப்படுகின்றது.
இதற்காக தமிழ் மக்கள் பலியாக்கப்படுகின்றனர். தமிழ் மக்களைப் பொறுத்தவரை இத்திட்டத்தினால் பல பாதிப்புக்கள் ஏற்படப்போகின்றன. அந்தப் பாதிப்புகள் ஏற்படாது என ஆய்வு ரீதியாகக்கூறுவதற்கு அரசாங்கம் தயாராக இல்லை.
அதில் முதலாவது நிலப்பறிப்பு ஆகும். வெடிவைத்த கல்லுக் கிராமத்தில் 1288 ஹெக்டெயரும், மருதோடைக் கிராமத்தில் 657 ஹெக்டெயரும், கரைதுரைப்பற்று பிரதேச செயலாளர் பிரிவில் 363 ஹெக்டெயரும் நேரடியாகவே நீரேந்துப் பகுதிக்குள் மூழ்க உள்ளன.
இதற்குள் 910 ஏக்கர் விவசாய நிலங்களும் அடங்கும். இவை நீரில் மூழ்காது என்பதற்கு எந்தவித உத்தரவாதங்களையும் அரசாங்கம் தரவில்லை. கம்பிலிவெல என்ற சிங்கள கிராமத்தில் 37 குடும்பங்கள் பாதிப்படைவர் என்பதற்காக மாற்று ஏற்பாடுகள் முயற்சிக்கப்படுகின்றன.
தமிழ்க் கிராமங்கள் பற்றி எந்தக் கருத்தும் இல்லை. 2002 ம் ஆண்டு வவுனியா அரசாங்க அதிபராக இருந்த கணேஸ் என்பவரினால் நியாப்திட்டத்தின் கீழ் பெரிய மருதோடைக்குளம், சித்தாத்துக்குளம், கல்லாத்துக்குளம் என்பவற்றை புனரமைப்பு செய்ய முன்மொழியப்பட்டது.
அதன் பின்னர் 2003 ம் ஆண்டு “சிரான்” திட்டத்தின் கீழும் இதற்கான முன்மொழிவு செய்யப்பட்டது.
அது நிறைவேற்றப்பட்டு இருந்தால் 2000 ஏக்கர் நிலங்களை விவசாய நிலங்களாக மாற்றியிருக்க முடியும்.
எந்த கவனமும் செலுத்தப்படவில்லை
அவை தொடர்பில் எந்த கவனமும் செலுத்தப்படவில்லை. கிவுல் ஓயாத் திட்டத்தினால் இம் மூன்று குளங்களும் நீரில் மூழ்க உள்ளன.
மகாவலி அபிவிருத்தி அதிகாரசபை அதிகாரிகள் நீரேந்துப் பகுதிகள் அனைத்தும் வனப்பகுதிகள் என பச்சைப் பொய்யைக் கூறுகின்றனர்.
தற்போது விவசாயம் செய்கைக்கு உள்ளாக்கப்பட்டிருக்கும் 910 ஏக்கர் நிலமும் வனப்பகுதிகளா? என்பதில் இவர்களிடம் தெளிவான பதில்கள் இல்லை.
தெளிவுபடுத்தல் கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ரவிகரனும், சத்தியலிங்கமும் இதனை தெளிவாக சுட்டிக்காட்டினர்.
இதற்கு பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க முற்கூட்டிய திட்டத்திலிருந்து தற்போதைய திட்டம் மாறுபட்டுள்ளதாகவும், இரண்டு நாட்களுக்குள் புதிய திட்டத்தை அனுப்பி வைப்பதாகவும் கூறியுள்ளார்.
ஆனால் இதுவரை புதிய திட்டம் அனுப்பப்பட்டதாகத் தகவல் இல்லை. சில கேள்விகளுக்கு மகாவலி அதிகார சபை அதிகாரிகளும் பதில் வழங்க திணறினர்.
மூத்த அதிகாரிகளுடன் உரையாடி பதில்களைப் பெற்றுத் தருவதாக கூறினர். இரண்டாவது நெடுங்கேணி பிரதேச மக்கள் இங்கு பாதிப்படையக்கூடிய சூழல் இருப்பதாகவும் ஓய்வு பெற்ற நிர்வாக அதிகாரியான செல்வின் இரேனியஸ் இதனை வலுவாக சுட்டிக்காட்டியுள்ளார்.
கிவுல் ஓயா நீர் நெடுங்கேணி மக்களின் பயன்பாட்டுக்குரியதாக இருந்தது. அணைகட்டினால் நெடுங்கேணிக்கு நீர் வருவது நின்றுவிடும். இதனால் நெடுங்கேணி பிரதேச மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவர்.
அப் பிரதேச நிலத்தடி நீரும் பாதிப்படையும். இதனால் கிணறுகளில் தண்ணீர் இல்லாத நிலை உருவாகலாம். பயிர்செய்கை நடவடிக்கைகளிலும் தடங்கல் ஏற்படும். மூன்றாவது வாழ்வாதார பாதிப்புகளும் ஏற்படப் போகின்றது.
காடு சார்ந்த பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தில் காடுகளும் முக்கிய பங்கினை வகிக்கின்றன. பருவ காலங்களில் காடுகளில் உள்ள பாலை மரங்களில் பாலைப்பழம் பறிப்பது வழமையாகும்.
நெற் செய்கை
இது குறிப்பிட்ட காலத்தில் வாழ்வாதாரத்தை தாங்கிப் பிடிப்பதில் முக்கிய பங்கினை வகிக்கின்றது. இதனை விட வேறு பல பழவகைகளும் உண்டு. காடுகளில் தேன் சேகரிப்பதும் முக்கிய தொழிலாக உள்ளது.
சிறிய பற்றைக் காடுகள் விறகுத் தேவைகளையும் பூர்த்தி செய்கின்றன. காடுகள் அழிக்கப்பட்டால் இவையெல்லாம் மக்களுக்கு கிடைக்காது போகும்.
நான்காவது சூழலியல் பாதிப்பாகும், இதுவும் முக்கியமானது. இது விடயத்தில் சுற்றாடல் அதிகார சபையின் ஆலோசனைகள் போதியளவு பெறப்படவில்லை.
குறிப்பாக காடுகள் அழிக்கப்பட்டால் மழை வீழ்ச்சி பாதிப்படையும் இதனை சுற்றுச்சூழல் ஆய்வு அறிக்கையும் ஏற்றுக்கொண்டுள்ளது. இதற்கான மாற்று நடவடிக்கைகள் எதுவும் கூறப்படவில்லை.
மழையை நம்பி நெற்செய்கையில் ஈடுபடும் பிரதேசங்கள் வடக்கு மாகாணத்தில் அதிகம் உண்டு.
போதியளவு மழையில்லாவிட்டால் இப் பிரதேசங்களில் நெற் செய்கை இடம்பெறாது தவிர இப் பிரதேசத்துக்கென 15 வகையான தாவரங்கள் உள்ளன. அவையெல்லாம் அழிபடப் போகின்றன.
இப்பிரதேசத்திற்குரிய விலங்கினங்களும் இருக்கின்றன. அவையும் அழிவடையலாம். இவை காரணமாக சூழலியல் சமநிலை குழம்பப் பார்க்கும். யானை - மனிதன் மோதல்களும் உருவாகலாம்.
ஏற்கனவே யானை - மனிதன் மோதல் இப்பிரதேசங்களில் உள்ளது. அது இன்னமும் அதிகமாகலாம். யானைகள் வசிப்பதற்கு போதிய காடுகள் இல்லாமையினால் இம்மோதல் ஏற்படுகின்றன.
சிங்கள மாவட்டங்களிலுள்ள யானைகளை இங்கு கொண்டு வந்து விடுகின்றனர் என்ற குற்றச்சாட்டும் உண்டு. வவுனியா கன்னாட்டி பகுதியில் இக்குற்றச் சாட்டு அதிகமாக உள்ளது.
ஐந்தாவது தொல்லியல் அமைவிடங்கள் பாதிப்படைவதாகும். இப்பிரதேசங்களில் அதிகளவிலான தொல்லியல் எச்சங்கள் உள்ளன. வன்னி சிற்றரசர்களின் ஆட்சியினை பிரதிபலிக்கும் தொல்லியல் இடங்களே அவையாகும்.
இவை தமிழ் மக்களின் வரலாற்றுடன் பின்னிப் பிணைந்தவை. தமிழ் மக்களோடு தொடர்புடைய தொல்லியல் எச்சங்களை அழிப்பது ஒரு வகையான கலாச்சார அழிப்பாகும்.
இந்த வகையில் இது ஒரு வகையான இன அழிப்பாகுமம். பண்டார வன்னியன் என்ற சிற்றரசனின் வரலாறு நாம் எல்லோரும் அறிந்தவையே. வரலாற்றின் மிகப் பிற்பட்ட ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே இவ்வாட்சி இருந்திருந்தது.
கண்டி அரசனுக்கு பல்வேறு வகைகளிலும் பண்டார வன்னியன் உதவி புரிந்தான் என்று வரலாற்று தகவல்கள் கூறுகின்றன.
கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகரன் உட்பட பல அமைச்சர்கள் இங்கு இனவாதமில்லை என்று கூறுகின்றனர். இனவாதம் இல்லையென்றால் இத்திட்டத்தினால் பயன்பெறும் 6000 குடும்பங்களில் 4372 குடும்பங்கள் ஏற்கனவே குடியேற்றப்பட்டவர்கள்.
அவர்களில் எத்தனை தமிழ்க் குடும்பங்கள் எனக் கூறுவார்களா? புதிதாக குடியேற இருக்கின்ற 1628 குடும்பங்களில் எத்தனை குடும்பங்கள் தமிழ்க் குடும்பங்கள் எனக் கூறுவார்களா? அமைச்சர் சந்திரசேகரன் புதிதாக தமிழர்களே குடியேற்றப்படுபவார்கள் எனக் கூறுகின்றார்.
இதற்கு மாறாக பிரதியமைச்சர் உபாலி சமரசிங்க தமிழர்களும் குடியேற்றப்படுவர் எனக் கூறுகின்றார். இவர்களில் யார் கூறுவது சரியானது? இத்திட்டத்தினால் பாதிக்கப்படுபவர்கள் பூர்வீக தமிழர்களாக இருக்கும்போது அவர்கள் தெளிவூட்டல் கூட்டத்திற்கு அழைக்கப்படாதது ஏன்?
தெளிவூட்டல் கூட்டம்
தெளிவூட்டல் கூட்டத்தினை முல்லைத்தீவு, வவுனியா நகரங்கள் இருக்கும்போது சிங்களக் குடியேற்ற பிரதேசமான வெலிஓயாவில் நடாத்தியது ஏன்? இவையெல்லாம் இனவாதமில்லையா?
தமிழ்க் கிராமங்கள் நீரில் மூழ்கடிப்பது இனவாதமில்லையா? உண்மைகளை நிலவிரிப்புக்குள் தள்ளுவதால் உண்மைகள் வெளி வராது என அரசாங்கம் கருதுகின்றதா? தமிழ்த் தரப்பிற்கு இதில் கனதியான பொறுப்புகள் உள்ளன.
இது ஒரு இன அழிப்பு நடவடிக்கையாக இருப்பதினால் இதனை நிறுத்துவது தமிழ் மக்களின் கூட்டுப் பொறுப்பாகும். பொறுப்புகளை வெறுமனவே தமிழ்க் கட்சிகளிடம் கொடுத்துவிட்டு தமிழ் மக்கள் அமைதியாக இருக்க முடியாது.
தமிழ் மக்களும், தமிழ்க் கட்சிகளும் இணைந்த கூட்டுச் செயற்பாடு இதற்குத் தேவை. கட்சி அரசியலும், குழு அரசியலும் இவ் விவகாரத்தில் இருக்கக் கூடாது. தமிழரசுக் கட்சி இவ்விவகாரம் தொடர்பாக சிவில் அமைப்புக்களுடன் இணைந்து போராட்டம் நடத்தியமை வரவேற்கத்தக்க விடயம் .
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இப் போராட்டத்தில் கலந்து கொள்ளாதது கவலைக்குரியது. பிழையான சக்திகள் மக்களுக்கான போராட்டத்தை நடாத்துவார்களாயின் அதனை ஆதரிப்பது அனைவரினதும் கடமையாகும்.
இனிவரும் காலங்களில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னனி இத்தகைய தவறுகள் விடாமல் இருப்பது அவசியம். தையிட்டி போராட்டத்தை தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சிவில் அமைப்புக்களுடன் இணைந்து நடாத்துவது போல கிவுல் ஓயா போராட்டத்தை தமிழரசுக் கட்சி சிவில் அமைப்புக்களுடன் இணைந்து நடாத்தட்டும்.
தையிட்டி போராட்டம் போல கிவுல் ஓயாத் திட்டத்தை கைவிடும் வரை போராட்டத்தை தொடருவது அவசியம்.
கருணாநிதியின் இருகோட்டுத் தத்துவம் போல போராட்டத்தை முடக்க தமிழரசுக் கட்சி முயலக் கூடாது. ஆர்ப்பாட்டங்களோடும் மட்டும் நின்று விடாது விழிப்புணர்வுப் பிரச்சாரமும் அவசியம்.
முதலில் இத்திட்டத்தின் பாதிப்புகள் தொடர்பான வலுவான ஆவணம் புள்ளி விபரங்களுடன் தயாரிக்கப்படல் வேண்டும்.
இந்த ஆவணத் தயாரிப்புக்;கு பல்கலைக்கழக வரலாறு, அரசறிவியல், தொல்லியல,; சூழலியல், பொருளாதாரம் போன்ற துறைகளின் நிபுணர்களை நாடலாம். ஆவணம் தயாரிக்கப்பட்டால் ஆவணத்தை அடிப்படையாகக் கொண்டு வெளிநாட்டுத் தூதுவர்களுடன் உரையாடலாம்.
குறிப்பாக ஜி.எஸ்.பி சலுகைகள் வழங்குவது தொடர்பில் ஆய்வுக்காக ஐரோப்பிய யூனியனைச் சேர்ந்தவர்கள் இலங்கை வந்திருக்கின்றார்கள். அவர்களிடம் கிவுல் ஓயா திட்டத்தினை நிறுத்துதல் என்பதனை நிபந்தனையாக வைக்கும் படி கோரலாம்.
கிவுல் ஓயா திட்டம்
ஏற்கனவே தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோகணேசன் மலையக மக்களின் காணி உரிமையினை நிபந்தனையாக வைக்கும் படி ஐரோப்பிய யூனியன் அதிகாரிகளிடம் கோரியிருக்கின்றார்.
கிவுல் ஓயா திட்டம் ஒரு இன அழிப்பாக இருப்பதனால் தாயக மட்டத்தில் போராடினால் மட்டும் போதாது. சர்வதேசம் தழுவிய வகையில் போராட்டங்கள் முன்னெடுக்கப்படல் வேண்டும்.
தமிழக சக்திகளும் புலம்பெயர் சக்திகளும் இதில் கவனத்தை குவிப்பது நல்லது. எல்லாவற்றுக்கும் நிபந்தனை தாயக மட்டத்தில் முதலில் நடவடிக்கைகளினை முன்னெடுப்பதே! தாயகம் இது விடயத்தில் கொதிநிலை அடையாமல் தமிழ் நாடும், புலம்பெயர் தேசமும் கொதிநிலை அடையும் என எதிர்பார்க்க முடியாது .
தமிழ் மக்கள் ஒரே நேரத்தில் அரசியல் கைதிகள் காணாமல் போனோர், பயங்கரவாதத் தடைச் சட்டம் தையிட்டி விவகாரம், செம்மணி விவகாரம் போன்றவற்றிற்காக போராட வேண்டிய நிலையில் இருப்பது உண்மை தான்.
அரசாங்கமும் தமிழ் மக்களை களைப்படைய வைப்பதற்காக பல முனைகளைத் திறந்து விட்டுள்ளது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மட்டுமல்ல பதவிக்கு வருகின்ற அனைத்து அரசாங்கங்களும் இவ்வாறான செயற்பாட்டையே முன்னெடுக்கின்றன.
அரசாங்கம் எத்தனை முனைகளைத் திறந்தாலும் போராட வேண்டியது தமிழ் மக்களின் கடமை ஏனெனில் இவை தமிழ் மக்களின் கூட்டிருப்போடும் , கூட்டுரிமையயோடும், கூட்டடையாளத்தோடும் தொடர்புபட்டவை. அழிந்து போவதை விட போராடுவது மேலானது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |