போர்க்காலத்தின் தகவல் பரிமாற்ற ஊடகமாக விளங்கிய வானொலி
ஒவ்வொரு ஆண்டும் பெப்ரவரி 13 ஆம் தேதி UNESCO அறிவித்துள்ள உலக வானொலி நாள் உலகெங்கும் வானொலியின் சமூகப் பங்களிப்பை நினைபடுத்துகிறது. தகவல் பரிமாற்றத்தின் மிக எளிய, மலிவு மற்றும் விரைவான சேவைக்காக வானொலி இன்னும் பல கோடி மக்களின் வாழ்வோடு இணைந்திருக்கிறது. தொலைதூர கிராமங்களிலிருந்து நகர மையங்கள்வரை மனிதர்களை ஒன்றிணைக்கும் ஒலிப் பாலமாக வானொலி தேசங்களையும் உலகத்தையும் இணைக்கின்றது. இலங்கைக்கு என்று தனித்துவமான வானொலிப் பாரம்பரியமுண்டு. அத்துடன் புலிகளின் குரல் என்ற தமிழர்களின் போராட்ட வானொலிப் பாரம்பரியமும் ஈழ மண்ணிற்குள்ளது.
இலங்கையின் வானொலிப் பாரம்பரியம்
தென்னாசியாவில் வானொலி ஒளிபரப்பின் முன்னோடிகளில் ஒன்றாக இலங்கை வானொலி எனப்படும் Sri Lanka Broadcasting Corporation (SLBC) விளங்குகிறது. 1920களிலேயே ஆரம்பித்த ஒலிபரப்பு, பின்னர் “Radio Ceylon” என உலகளவில் பிரசித்திபெற்றது ஆசியாவின் முதல் வானொலி. குறிப்பாக தமிழ்ச் சேவை, வடக்கு–கிழக்கு மக்களின் கலாச்சார, அரசியல் மற்றும் சமூக உணர்வுகளை வெளிப்படுத்திய முக்கிய மேடையாக இருந்தது. போர்காலத்திலும் பேரிடர் சூழல்களிலும், தகவல் பரிமாற்றத்தின் முதன்மை ஆதாரமாக வானொலி திகழ்ந்தது. நூற்றாண்டு கடந்து இன்னமும் மக்களின் மனங்களில் இலங்கை வானொலி நீங்காத இடத்தை தக்க வைத்திருக்கின்றது.
இலங்கையில் உள்ள மக்கள் மாத்திரமின்றி தமிழ்நாட்டு மக்களின் வாழ்விலும் உயர்விலும் நகர்விலும் இலங்கை வானொலிக்கென ஒரு தனியான இடமுண்டு. இலங்கையில் வானொலி வெறும் செய்தி ஊடகமல்ல; அது கலாச்சார நினைவகமாகவும் இருந்தது. நாட்டுப்புறப் பாடல்கள், இலக்கிய நிகழ்ச்சிகள், விவசாய அறிவுரைகள், கல்வி ஒலிப்பரப்புகள் ஆகியவை கிராமிய வாழ்க்கையுடன் வானொலியை நெருக்கமாக இணைத்தன. இன்று தனியார் எப்.எம். நிலையங்கள் பெருகியுள்ளன. இசை, இளைஞர் நிகழ்ச்சிகள், அரசியல் விவாதங்கள் என வானொலி புதிய வடிவம் பெற்றாலும், அதன் அடிப்படை நோக்கம் மக்களை இணைக்கும் சேவையில் எந்த மாற்றமுமில்லை.
இந்தியாவின் வானொலி வளம்
இந்தியாவில் All India Radio (AIR), “ஆகாஷ்வாணி” என அழைக்கப்படும் அரசு வானொலி, 1936இல் தொடங்கப்பட்டது. பல மொழிகளிலும் ஆயிரக்கணக்கான நிகழ்ச்சிகளை ஒலிபரப்பும் AIR, இந்தியாவின் மொழி மற்றும் பண்பாட்டு பல்வகைப்பாட்டை பிரதிபலிக்கிறது. செய்தி, நாடகம், இசை, கல்வி, விவசாயம், அறிவியல் எல்லாவற்றிற்கும் தனித்தனி நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன.
சுதந்திரப் போராட்ட காலத்தில் வானொலி தேசிய உணர்வை ஊட்டிய கருவியாக இருந்தது. பின்னர், கிராமிய மேம்பாடு, சுகாதார விழிப்புணர்வு, பெண்கள் முன்னேற்றம் போன்ற சமூகப் பணிகளில் முக்கிய பங்கு வகித்தது. சமீப காலங்களில் சமூக வானொலிகள் (Community Radio) இந்தியாவில் வேகமாக வளர்ந்து வருகின்றன. உள்ளூர் குரல்களுக்கு இடமளித்து, சிறுபான்மையினரின் அனுபவங்களை வெளிக்கொணரும் பணியை அவை மேற்கொள்கின்றன.
டிஜிட்டல் காலத்திலும் வானொலியின் தேவை
இணையம், சமூக ஊடகங்கள், பொட்காஸ்ட்கள் போன்ற புதிய தொழில்நுட்பங்கள் வளர்ந்தாலும், வானொலி தனது தனித்தன்மையை இழக்கவில்லை. மின்சாரம் அல்லது இணையம் இல்லாத சூழல்களிலும் செயல்படக் கூடிய சாதனமாக அது தொடர்ந்து பயன்படுகிறது. இயற்கை அனர்த்தங்கள், அரசியல் பதற்றங்கள் போன்ற அவசரநேரங்களில் வானொலி நம்பகமான தகவல் ஊடகமாக விளங்குகிறது.
தமிழீழ வானொலித்துறை
புலிகளின் குரல் என்பது இலங்கையில் போர் இடம்பெற்ற காலத்தில் தமிழீழ விடுதலைப் புலிகளின் அதிகாரபூர்வ ஒலிபரப்பு சேவையாக இயங்கியது. 1990களில் வடக்கு இலங்கையில் இருந்து ஒலிபரப்பான இந்த வானொலி, செய்தி அறிவிப்புகள், அரசியல் கருத்துரைகள், நினைவுநாள் நிகழ்ச்சிகள் மற்றும் இயக்கத்தின் உள்நிலை தகவல்களை வெளியிட்டது. போர்நிலையிலிருந்த சூழலில், அது இயக்கம் மற்றும் போர் சார்ந்த தகவல் பரிமாற்ற ஊடகமாகவும் கருத்தியல் பரப்புரைக் கருவியாகவும் செயல்பட்டது. 2009ஆம் ஆண்டு இறுதிப்போருடன் ஈழ மண்ணில் அதன் ஒலிபரப்பு நிறுத்தப்பட்டது./
சினிமா பாடல்களைத் தவிர்த்து, களியாட்ட நோக்கம் தவிர்த்து விடுதலை பற்றிய உணர்வை ஊட்டியதுடன் சமூக எழுச்சிக்கான ஒலிப்படைப்புக்களையும் புலிகளின் குரலும் தமிழீழ வானொலியும் வடக்கு கிழக்கு மண்ணிற்கு வழங்கியது. விடுதலைப் போராட்டம் பற்றிய பாடல்கள் மக்களின் வாழ்வில் இரண்டறக் கலந்தன. இன்று விடுதலைப் புலிகள் இயக்கம் நிலத்திலற்ற காலத்திலும் விடுதலை பற்றிய உணர்வும் கருத்துக்களும் போராளிகளைப் பற்றிய நினைவும் ஆழமாக வேரூன்றி இருக்கின்றன என்றால் அதற்கு அன்றைய காலத்தில் புலிகளின் குரல் வானொலியும் விடுதலை இயக்கப் பாடல்களும் ஏற்படுத்திய தாக்கமே ஆகும்.
உலகத் தமிழர் வானொலிச் சேவை
உலகத் தமிழர்களின் வானொலி முயற்சிகள், புலம்பெயர் வாழ்வின் மத்தியில் மொழி, கலாசாரம் மற்றும் அடையாளத்தைப் பாதுகாக்கும் பண்பாட்டு இயக்கமாக உருவெடுத்துள்ளன. கனடா, பிரிட்டன், பிரான்ஸ், ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் இயங்கும் சமூக மற்றும் இணைய வானொலிகள், உள்ளூர் தமிழர் சமூகத்தின் செய்திகள், இலக்கியம், இசை, மத நிகழ்வுகள் மற்றும் அரசியல் விவாதங்களை ஒலிபரப்புகின்றன. இணைய தொழில்நுட்ப வளர்ச்சியால், பாரம்பரிய எப்.எம். ஒலிபரப்பைத் தாண்டி, ஆன்லைன் ஸ்ட்ரீமிங் மற்றும் பொட்காஸ்ட் வடிவங்களில் உலகம் முழுவதும் உள்ள தமிழர்களை இணைக்கும் ஒலி வலைப்பின்னல் உருவாகியுள்ளது. இவ்வாறான முயற்சிகள் வெறும் தகவல் பரிமாற்றம் மட்டுமல்ல; தலைமுறைகள் இடையிலான மொழிப் பிணைப்பை உறுதிப்படுத்தும் சமூக நினைவகங்களாகவும் செயல்படுகின்றன.
தொழில்நுட்ப மாற்றங்கள் எவ்வளவு ஏற்பட்டாலும், மனித குரலின் நம்பகத்தன்மை மற்றும் உணர்ச்சி பிணைப்பு அழியாது என்பதையே உலக வானொலி நாள் கற்றுத் தருகிறது. இலங்கையிலும் இந்தியாவிலும் வானொலி, வரலாற்றை சாட்சியமாகக் கொண்டதும், எதிர்காலத்தை நோக்கியதுமான பயணத்தைக் கொண்டது. அது வெறும் தகவல் தொடர்புச் சாதனமல்ல. நாடு மற்றும் சமூகங்க நினைவுகளின் ஒலிப்பதிவு. மக்களின் இதயத் துடிப்பை எடுத்துச் செல்லும் ஒலி மொழி.
இலங்கையிலும் இந்தியாவிலும், வானொலி இன உரிமை, சமூக நீதி, மொழி உரிமை, கலாச்சார அடையாளம் ஆகியவற்றை பாதுகாக்கும் கருவியாகத் திகழ்கிறது. ஈழ மண்ணல் போர் நடந்த காலத்தில் வானொலிகள் பொழுதுபோக்கைக் கடந்து மக்களை ஆற்றுப்படுத்தவும், தகவல் பரிமாற்றத்திற்கும் பயன்பட்டது ஒரு மாறுபட்ட வரலாற்று அனுபவம் ஆகும். அத்துடன் தமிழ்ச் சேவைகள், மொழி மற்றும் இன அடையாளங்களை காக்கும் பணியில் முக்கிய இடம் வகிக்கின்றன. ஒலியின் மூலம் உணர்வுகளைப் பகிரும் சக்தி, மனிதர்களின் உள்ளங்களை நேரடியாகத் தொட்டுச் செல்கிறது.
பொறுப்பு துறப்பு!
இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Theepachelvan அவரால் எழுதப்பட்டு, 15 February, 2026 அன்று ஐபிசி தமிழ் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் ஐபிசி தமிழ் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை.
போர்க்காலத்தின் தகவல் பரிமாற்ற ஊடகமாக விளங்கிய வானொலி 3 மணி நேரம் முன்