உலக நாடுகள் மீதான ட்ரம்பின் இறக்குமதி வரி...! அமெரிக்க உச்ச நீதிமன்றின் அதிரடி உத்தரவு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், அவசர அதிகாரங்கள் சட்டத்தின்கீழ் உலக நாடுகளின் பொருட்கள் மீது விதித்த பரஸ்பர இறக்குமதி வரிகள் செல்லாது என அமெரிக்க உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
வர்த்தகப் பற்றாக்குறையைக் குறைக்கும் நோக்கில் ட்ரம்ப் விதித்த இந்த வரிகளுக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கை விசாரித்த தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் தலைமையிலான 9 நீதிபதிகள் கொண்ட அமர்வு, இந்தத் தீர்ப்பை வழங்கியது.
இந்தநிலையில், ஆறு நீதிபதிகள் ட்ரம்பின் வரி விதிப்புக்கு எதிராகவும், 3 நீதிபதிகள் ஆதரவாகவும் தீர்ப்பளித்த நிலையில், பெரும்பான்மை அடிப்படையில் வரி விதிப்பு செல்லாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
வரி விதிப்புகள்
இதனடிப்படையில், வரி விதிக்கும் அதிகாரம் நாடாளுமன்றத்திற்கே உள்ளது, அரசு நிர்வாகத்திற்கு அல்ல என நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அத்தோடு, இந்த வரி விதிப்பினால் இந்தியப் பொருட்கள் மீது ஒட்டுமொத்தமாக 50 சதவீத வரி விதிக்கப்பட்டு, பின்னர் பேச்சுவார்த்தை மூலம் 18 சதவீதமாகக் குறைக்கப்பட்டிருந்தது.

ட்ரம்பின் இந்த வரி விதிப்புகள் மூலம் இதுவரை சுமார் 13,400 கோடி டொலர்கள் வசூலிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தத் தொகை இறக்குமதியாளர்களுக்குத் திருப்பி அளிக்கப்படுமா என்பது குறித்துத் தீர்ப்பில் தெளிவுபடுத்தப்படவில்லை.
இதனிடையே, உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அவமானத்திற்குரியது என ட்ரம்ப் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து அமெரிக்க டொலரின் மதிப்பு சரிவைச் சந்தித்தாலும், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய பங்குச் சந்தைகள் பெரும் எழுச்சியைக் கண்டுள்ளன.
மேலும், அசோசியேடட் பிரஸ் நடத்திய கருத்துக்கணிப்பில் 58 சதவீத அமெரிக்கர்கள் ட்ரம்ப் தனது வரம்பை மீறி வரி விதித்ததாக தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |