உதயகுமார் - குசுமாவதி இரட்டைக் கொலை வழக்கில் 8 பேருக்கு மரண தண்டனை
கொலைக் குற்றச்சாட்டில் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்ட 8 பேருக்கு கொழும்பு உயர் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது.
நீண்டகால விசாரணையின் பின்னர், கொழும்பு உயர் நீதிமன்ற நீதியரசர் புத்திக ஸ்ரீ ராகலவால் இந்தத் தீர்ப்பு இன்று (08) வழங்கப்பட்டது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேரில் 7 பேர் இன்று நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்ததோடு, மேலும் ஒருவர் முன்னிலையாகாத நிலையிலேயே வழக்கு விசாரணையை முன்னெடுக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியது.
தீவிரமடைந்த தகராறு
1997 ஆம் ஆண்டு, கொழும்பு நீதிமன்ற எல்லைக்குட்பட்ட தாராவத்தை பகுதியில் ஹேவா படகொடகே குசுமாவதி மற்றும் வேலாயுதம் உதயகுமார் ஆகியோர் கொலை செய்யப்பட்டதுடன், மேலும் பலர் காயமடைந்த சம்பவம் தொடர்பிலேயே சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

இரு தரப்பினருக்கிடையிலான தகராறு தீவிரமடைந்ததைத் தொடர்ந்து இந்தக் குற்றச்செயல் இடம்பெற்றதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.
நீண்டகால வழக்கு விசாரணையின் பின்னர் தீர்ப்பை வழங்கிய நீதியரசர், குற்றஞ்சாட்டப்பட்ட 8 பேருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் நியாயமான சந்தேகத்திற்கு அப்பாற்பட்டு நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
இதனையடுத்து, குற்றவாளிகளாகத் தீர்ப்பளிக்கப்பட்ட 8 பேருக்கும் மரண தண்டனை விதிக்கப்படுவதாக நீதியரசர் உத்தரவிட்டார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |