மத்திய கிழக்கின் மரணப் பொறியில் ஈரானின் வீர வசவுகளுக்குப் பின்னால் அரங்கேறும் ஒரு தேசத்தின் தற்கொலை
இன்று பாரசீக வளைகுடா, திரியில் நெருப்பு வைக்கப் பட்ட வெடிகுண்டு போல எப்போது வேண்டுமானாலும் வெடித்துச் சிதறிவிடும் என்ற நிலையில் இருக்கிறது. மறுபுறம் ஈரானியப் போர்க்களம் பேரழிவின் உச்சத்தில் பல தலைமுறைகளுக்கான வறுமைக்கு வரம்பிட்டு நிற்கிறது.
இப்படியான சூழலில் சமூக ஊடகம் என்ற மாயக்கண்ணாடி போர்க்களக் காட்சிகளை அதை எழுதுபவர்களின் மனநிலைக்கேற்ப நமக்குக் காட்டிக் கொண்டிருக்கிறது.
ஒன்று மதம், இன்னொன்று அமெரிக்க எதிர்ப்புவாதம்; இவை இரண்டும் நம்மை வந்தடையும் கருத்தியல்களில் ஒரு வீண் வீரியக் கதைகளைக் கட்டவிழ்த்து விடுகிறது.
தமது மன ஆனந்தத்திற்காகக் கருத்துகளைப் புனைபவர்களின் கரங்களில் சிக்குண்டு கிடக்கும் செய்தி உலகம், எதிர்காலம் பற்றிய எந்தப் பிரக்ஞைகளும் இல்லாமல் கொண்டாடித் திரிவதோடு, ஒரு மாய வலைகளையும் அதற்கு மாறான செய்திகளைச் சேர்ப்பவர்களை மோசமான வார்த்தைகளால் வசைபாடி இன்புறும் ஒரு உளவியல் வறுமைக்கு உட்பட்டிருக்கிறது நமது சமூக ஊடகச் சமூகம்.
உண்மையில் இவற்றிற்கு அப்பால் நாம் இந்தப் போர்க்கள நிலவரத்தை அணுக வேண்டிய யதார்த்தமான பார்வை ஒன்றும் உண்டு. இந்த மார்ச் மாதத்தின் மிக மோசமான நாட்களில் மத்திய கிழக்கில் அதன் வான்பரப்பில் வெடித்துக்கொண்டிருக்கும் ஏவுகணைகளைப் பார்த்து நம்மில் ஒரு தரப்பினர், இது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு விழுந்த பலத்த அடி என்று கொண்டாடி வருகிறார்கள்.
சமூக வலைத்தளங்களில் பகிரப்படும் காணொளிகளைப் பார்த்துவிட்டு உணர்ச்சிவசப்படுவது இயல்பான அல்லது இலகுவான ஒன்று. ஆனால், யுத்தத்தின் கோர முகத்தை அதன் அருகில் இருந்து பார்த்தவர்களுக்குத்தான் தெரியும், அந்த நிலத்தில் சிதறுவது வெறும் கட்டிடங்கள் மட்டுமல்ல, ஒரு தேசத்தின் எதிர்காலமும்தான் என்பது.
ஈரானியப் போர்க்களம் தொடர்பிலும் அதன் அதிரடித் தாக்குதல்கள் என்று உச்சிகொட்டும் கதைகளுக்கும் பின்னால் இருக்கும் கசப்பான, அதேநேரம் பேசியே ஆகவேண்டிய உண்மைகளை நாம் உரக்கப் பேச வேண்டிய தருணம் இதுதான்.
கட்டிடம் தகர்ந்தால் தேசம் அழியாது: இஸ்ரேலின் நிறுவன பலம்
முதலாவது, ஒரு நாட்டின் கட்டிடம் தகர்ந்தால் அந்த தேசம் அழியாது. இஸ்ரேல் என்பது ஒரு சர்வதேச ரீதியிலான நிறுவன பலம். அந்த நாட்டின் மீது குண்டுகள் போடுவதால் அல்லது அதன் மீது ஏவுகணைகளை பொழிவதால் அந்த நாட்டை வீழ்த்திவிடலாம், அழிவடைந்து விடும் என்றெல்லாம் நினைப்பது மிகப்பெரிய முட்டாள்தனம்.
இப்போதைய உலக ஒழுங்கில் இஸ்ரேல் என்பது ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பில் மட்டும் சுருங்கிவிடவில்லை. அது உலகளாவிய நிதி, தொழில்நுட்பம் மற்றும் அதிகார மையங்களில் பின்னிப் பிணைந்திருக்கிறது.

இங்கு பலரும் சொல்லுவது போல ஒரு வாதத்திற்கு வைத்துக்கொள்வோம்; இன்று இஸ்ரேலில் உள்ள அத்தனை கட்டிடங்களும் தரைமட்டமாக்கப்பட்டாலும், அதன் 'அயர்ன் டோம்' முழுமையாகச் செயலிழந்து போனாலும், அடுத்த சில வாரங்களில் உலகின் இன்னுமொரு மூலையில் இதைவிடப் பலமான ஒரு புதிய இஸ்ரேலை அவர்களால் உருவாக்கிவிட முடியும்.
பிரான்ஸ், பிரித்தானியா போன்ற நாடுகளில் யூதக் குடியிருப்புகளுக்கு அருகில் வாழ்பவர்களுக்கு இது நன்றாகத் தெரியும். இன்றைய உலகை ஆளும் ஒரு சில பணக்கார யூதர்களின் மூளையும், அவர்களின் நிதி பலமும் போதும் ஒரு தேசத்தையே பூஜ்யத்திலிருந்து மீளக்கட்டியெழுப்ப!
ஒன்றை நாம் ஏற்றே ஆகவேண்டும்; அவர்கள் 1900 ஆண்டுகளுக்கு முன் நாடுகள் தோறும் அகதியாகி அழிவடைந்த யூதர்கள் அல்ல, நெப்போலியனாலும் அலெக்சாண்டரினாலும் வெல்லப்பட முடியாது போன உலகை வென்று இன்று ஆண்டுகொண்டிருப்பவர்கள்.
பொருளாதார யதார்த்தம்: அமெரிக்காவிற்கு இது ஒரு பொருட்டே இல்லை
இரண்டாவது ஒரு பொருளாதாரக் கணக்கு. அமெரிக்காவிற்கு இந்தப் போர்ச் செலவீனம் என்பது வெறும் ஒன்றிரண்டு நாள் அமெரிக்கர்களின் செலவீனம் மட்டுமே.
அதுமட்டுமல்ல, இந்த யுத்தத்திற்கான நிதியை அமெரிக்கா மட்டும் சுமக்கப்போவதில்லை; பின்னணியில் பல அரேபிய நாடுகளின் மறைமுக நிதிப்பங்களிப்பும் உண்டு.

நம்மில் பலர் ஈரானியப் போரில் அமெரிக்கா 10 பில்லியன் டொலர்களைப் போரில் இழந்தது என்று குதூகலிக்கின்றார்கள். ஆனால், உண்மையில் இது அமெரிக்கப் பொருளாதாரத்திற்கு ஒரு பொருட்டே இல்லை.
உங்களுக்கு ஒன்று தெரியுமா? இன்று நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் பேஸ்புக் என அறியப்படும் முகநூல், கூகுள் போன்ற நிறுவனங்கள் மூலம் அமெரிக்காவிற்கு ஆண்டுதோறும் கிடைக்கும் வரி வருமானம் ஈரானின் மொத்த பாதுகாப்புக்கான பாதீட்டை (Budget) காட்டிலும் பல மடங்கு அதிகம்.
அப்பிள் (Apple) போன்ற ஒரே ஒரு பன்னாட்டு நிறுவனம் கட்டும் வரியே சுமார் 19 பில்லியன் டொலர்களைத் தாண்டும்போது, இவர்கள் சொல்லும் 10 பில்லியன் என்பது அவர்களுக்கு மிகச் சாதாரணமான ஒரு சிறு செலவு மட்டுமே.
ஆனால், ஈரான் என்ற நாட்டைப் பொறுத்தவரை இன்று இடம்பெறும் ஒவ்வொரு தாக்குதலும் அதன் அடுத்த தலைமுறையின் உணவையும் வாழ்வாதாரத்தையும் அடகு வைக்கும் ஒரு தற்கொலை முயற்சியாகும்.
நட்பு நாடு என்ற பெயரில் அரங்கேறும் சதுரங்க விளையாட்டு
மூன்றாவதாக, நட்பு நாடு என்ற போர்வையில் வரும் ரஷ்யா - சீனாவின் சதுரங்க விளையாட்டுக்கு எதிர்காலத்தில் ஈரான் கொடுக்கப்போகும் விலையை ஒரு முறை சிந்தித்துப் பாருங்கள்.
ஈரானுக்கு இன்று ரஷ்யாவும் சீனாவும் ஆதரவு தருவதாகப் பெரிதாகக் கொக்கரிக்கிறார்கள். ஆனால், இந்த 'நட்புக்கரம்' என்பது ஈரானின் இயற்கை வளங்களைச் சுரண்டுவதற்கான ஒரு நீண்டகாலத் திட்டம் மட்டுமே.

ரஷ்யாவோ சீனாவோ உண்மையிலேயே ஈரானுக்கு உதவ நினைத்திருந்தால், போரின் போக்கை மாற்றக்கூடிய தங்களின் அணுஆயுதத் தொழில்நுட்பங்களையோ அல்லது ரஷ்யாவின் 'அன்ஸ்டொப்பபிள் மிஸைல்' (Unstoppable Missile) என்று அழைக்கப்படும் அதிநவீன ஏவுகணைகளில் ஒரு சிலவற்றையோ ஈரானுக்கு வழங்கி உதவி இருக்கலாம். ஆனால் அதை அவர்கள் செய்யமாட்டார்கள்.
ஏனெனில் ரஷ்யாவைப் பொறுத்தவரை ஈரான் என்பது அமெரிக்காவைச் சீண்டிப் பார்ப்பதற்கான ஒரு பகடைக்காய் மற்றும் தனது எண்ணெய் வியாபார லாபத்திற்கான ஒரு களப்பலி மட்டுமே.
தனது உக்ரைன் போரில் ஈரானைப் பயன்படுத்திக் கொண்டு, பதிலுக்கு ஆயுதங்களைத் தருவதாகக் கூறும் ரஷ்யா, ஒருபோதும் ஈரானைத் தனக்கு நிகரான வல்லரசாக வளர விடாது.
ஏற்கனவே இலங்கை, பாகிஸ்தான் மற்றும் ஆபிரிக்க நாடுகளில் 'முதலீடு' என்ற போர்வையில் நுழைந்து, அந்த நாடுகளின் முக்கியத் துறைமுகங்களையும் நிலவளங்களையும் தன்வசப்படுத்திய சீனாவின் அதே 'கடன்பொறி' தந்திரம் தான் இங்கும் அரங்கேறிக்கொண்டிருக்கிறது.
அது ஈரானின் எண்ணெய் மற்றும் எரிவாயுவை உலகச் சந்தை விலையை விட மிகக் குறைந்த விலைக்குப் பெறுவதே சீனாவின் இறுதியான இலக்காகும். மக்களின் பாதுகாப்பு மற்றும் அதிகார வர்க்கத்தின் அலட்சியம் இப்படியான ஒரு சூழலில் சில கேள்விகள் உண்டு.
இஸ்ரேல் மற்றும் ஈரானைப் பொறுத்தவரை மக்களின் பாதுகாப்பின் முரண்பாடு என்பது பயங்கரமானது. இஸ்ரேல் தனது குடிமக்களின் உயிருக்கு அதிக மதிப்பளிக்கும் ஒரு நாடு; நவீன வான் பாதுகாப்பு மற்றும் நிலத்தடிப் பதுங்கு குழிகளைத் (Bunkers) தனது முதல் முன்னுரிமையாகக் கொள்ளும்.
ஆனால், ஏவுகணைகளை ஏவுவதில் காட்டும் முனைப்பைத் தனது சொந்த நாட்டு மக்களின் பாதுகாப்பில் காட்டாத ஒரு அதிகார வர்க்கம் ஈரானில் இன்றும் இருந்துகொண்டிருக்கிறது.
உண்மையில் போர் மூளும்போது பலியாவது எப்போதும் அப்பாவி குழந்தைகளும், அகதிகளாக வீதிக்கு வரும் மக்களுமே தவிர, குளிரூட்டப்பட்ட அறைகளில் அமர்ந்து உத்தரவிடும் அதிகாரிகளல்ல.
ராஜதந்திரத் தோல்வியும் தனிமைப்படுத்தப்படும் ஈரானும்
ஐந்தாவது விடயம், ராஜதந்திரத் தோல்வியடைந்திருக்கும் ஈரான் தனிமைப்படுத்தப்பட்டுக்கொண்டிருக்கிறது. அது தனது அண்டை நாடுகளைத் தாக்கியது மிகப்பெரிய ராஜதந்திரத் தவறு.
இன்று கத்தார் தனது நாட்டில் ஈரானிய தூதரகத்தை மூட உத்தரவிடுகிறது என்றால், அது அமெரிக்காவின் திரைமறைவு வேலைகளின் வெற்றி. உண்மையில், ஈரானிடம் அணுஆயுதம் வரக்கூடாது என்பதில் இஸ்ரேலை விட சவூதி அரேபியா மிகத் தீவிரமாக இருக்கிறது.

இந்த யுத்தம் தொடங்கப்பட வேண்டும் என சவுதி இளவரசர் (MBS) அமெரிக்காவிற்கு அதிக அழுத்தம் கொடுத்தார் என நீயூயோர்க் டைம்ஸ் (New York Times) குறிப்பிட்டிருந்தது இங்கே உற்றுநோக்கத்தக்கது.
மெல்ல மெல்ல ஈரானை ஒரு தீவிரவாதத் தீவாக மாற்றி, அரபு உலகிலிருந்தே அதைத் துண்டிக்கும் வேலை கனகச்சிதமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.
இந்த விவகாரத்தில் இங்கிலாந்தும் ஐரோப்பாவும் இப்போது அமைதி காக்கலாம்; ஆனால் ஒரு கட்டத்தில் எண்ணெய் கப்பல் போக்குவரத்தைப் பாதுகாக்கப்போகிறோம் என்ற பெயரில் அவை மீண்டும் அமெரிக்காவுடன் கைகோர்த்து ஒரு பேரழிவை ஈரானிய தரப்பிற்கு வழங்கப்போவது உறுதி என்றே சொல்ல முடியும்.
நேரடி விஷம் vs மெதுவான விஷம்
இறுதியாக ஒன்றைப்புரிந்துகொண்டே ஆகவேண்டும். ஈரான் அமெரிக்காவுக்கும் இஸ்ரேலுக்கும் அடிக்கிறது என்று கைதட்டிக் கொண்டாடி நாலு முகநூல் பதிவுகளைப் பகிர்ந்து வேடிக்கை பார்ப்பது இலகுவானதுதான்.
ஆனால், அமெரிக்கா ஒரு நேரடி விஷம் என்றால், ஈரானின் நட்பு நாடுகள் என்கிற சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதரவு என்பது மெதுவான விஷம்.

இன்று ஈரான் தனது அதிகாரத்தைப் பலப்படுத்துவதாக நினைத்துக்கொண்டு, தனது நாட்டின் இயற்கை வளங்களையும், அடுத்த தலைமுறையின் சுதந்திரத்தையும் இந்த ஆதிக்க வெறிபிடித்த வல்லரசுகளிடம் அடகு வைத்துக் கொண்டிருக்கிறது என்ற கசப்பான உண்மையைப் பற்றி நீங்கள் சிந்தித்ததுண்டா?
வெறும் மதச்சார்புக்காக உணர்ச்சிவசப்பட்டு யதார்த்தத்தை அறிந்துகொள்ள விருப்பமில்லாமல் வெறும் கதைகளில் வீரம் பேசுவதற்கு அப்பால் இந்த விஷயங்களை ஆழமாகச் சிந்தித்துப் பார்த்தால் உண்மை என்ன என்பது நன்றாகப் புரியும்.
ஒன்றை மட்டும் சொல்லியாக வேண்டும்; இது ஈரானுக்கு எதிரான அல்லது இஸ்ரேலிய ஆதரவுக்கான கட்டுரை அல்ல. அதிகார வெறியினால் சுதந்திரக்கனவு சிதைக்கப்பட்ட தேசமொன்றின் அழியும் மக்களின் பக்கம் நின்று சிந்திக்கும் ஒரு ஊடகனின் ஆதங்கம் மட்டுமே.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |