உயர்தர பரீட்சை திகதி - பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
புதிய இணைப்பு
உயர்தரப் பரீட்சையின் எஞ்சிய பகுதி ஜனவரி மாதத்திற்குள் கட்டாயம் நடத்தப்படும் என்றும் மாணவர்கள் திகதி அறிவிப்புக்காகக் காத்திருக்காமல் ஜனவரியை இலக்காகக் கொண்டு தயாராகுமாறும் பரீட்சைத் திணைக்களம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
குறித்த அறிவிப்பை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ளார்.
இந்தநிலையில் பாதிக்கப்பட்ட மாணவர்களின் துல்லியமான தரவுகள் கிடைத்த பின்னரே பரீட்சையை நடத்த முடியும் என அவர் தெரிவித்துள்ளார்
பரீட்சைத் திணைக்களம்
எனவே, ஜனவரிக்குள் அனைத்துத் தரவுகளையும் துரிதமாகச் சேகரிக்கும் பணி நடைபெற்று வருவதாகப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் குறிப்பிட்டுள்ளளார்.

மேலும் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்டுள்ள உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் பாடசாலை மற்றும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் குறித்த தகவல் தெரிந்தால், அருகிலுள்ள பிரதேச கல்வி அலுவலகத்துக்கோ அல்லது 1911 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கோ அறிவிக்குமாறு பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் கோரிக்கை விடுத்துள்ளார்.
அத்துடன் தற்போது பாதுகாப்பு மையங்களில் தங்கியுள்ள உயர்தரப் பரீட்சை மாணவர்களுக்குத் தேவையான அதிகபட்ச வசதிகளை வழங்க உதவுமாறும் அனைத்து தரப்பினரிடமும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முதலாம் இணைப்பு
க.பொ.த உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாத வினாத்தாள்களை 2026 ஜனவரி மாதத்தில் நடத்துவதற்கு தற்போது முயற்சிக்கப்பட்டு வருகிறது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த விடயத்தை கல்வி அமைச்சின் (Ministry of Education) செயலாளர் நாலக்க களுவெவ குறிப்பிட்டுள்ளளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 9 மாகாணங்களிலும் சுமார் ஆயிரம் பாடசாலைகள் ஏதோ ஒரு வகையில் பாதிப்புக்குள்ளாகியுள்ளது.
பாடசாலைகள் திறக்கப்படும் திகதி
அதற்கமைய, பாடசாலை செல்லும் சுமார் ஒரு இலட்சம் மாணவர்கள் இந்த அனர்த்தத்தினால் ஏதோ ஒரு வகையில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எவ்வாறாயினும், அனர்த்தத்தினால் கடுமையாகப் பாதிக்கப்படாத பிரதேசங்களில் உள்ள பாடசாலைகளை இம்மாதம் 16 ஆம் திகதி திறப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
எந்தப் பிரதேசத்தில், எந்தப் பாடசாலைகள் திறக்கப்படும் என்பது குறித்த உத்தியோகபூர்வ அறிவிப்பை நாளை (8) அல்லது செவ்வாய்க்கிழமை (9) வெளியிட எதிர்பார்த்துள்ளோம்.
இப்பாடசாலைகளைத் திறப்பதுடன், க.பொ.த உயர்தரப் பரீட்சையில் நடத்தப்படாத வினாத்தாள்களை 2026 ஜனவரி மாதத்தில் நடத்துவதற்கு தற்போது முயற்சிக்கப்பட்டு வருகிறது எனவும் செயலாளர் நாலக்க களுவெவ தெரிவித்துள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |