அதிக விலைக்கு விற்பனை செய்யப்பட்ட குடிநீர் போத்தல் : ஒரு மில்லியன் ரூபாய் அபராதம்!
அதிக விலைக்கு குடிநீர் போத்தல்களை விற்பனை செய்த விடுதி ஒன்றிற்கும் தனியார் நிறுவனமொன்றிற்கும் ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபைக்கு கிடைத்த தகவலுக்கு அமைய, சுற்றிவளைப்புகளை மேற்கொண்டு இது தொடர்பில் வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்தநிலையில் பெலிஹுல்ஓயா மற்றும் பண்டாரவளை பிரதேசத்தில் உள்ள விடுதி மற்றும் தனியார் நிறுவனமொன்றிற்கு எதிராகவே இவ்வாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஒரு லீற்றர் குடிநீர் போத்தல்
பெலிஹுல்ஓயா பிரதேசத்தில் உள்ள குறித்த விடுதியானது, 100 ரூபாவிற்கு விற்கப்பட வேண்டிய ஒரு லீற்றர் குடிநீர் போத்தல் ஒன்றை 400 ரூபாவிற்கு விற்பனை செய்த குற்றச்சாட்டின் பேரில், குறித்த நிறுவனத்திற்கு எதிராக பலாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்ய அந்த அதிகார சபை நடவடிக்கை எடுத்திருந்தது.

இதன்போது, பலாங்கொடை நீதவான் நீதிமன்றம் குறித்த விடுதிக்கு ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டது.
இதேவேளை, 70 ரூபாவிற்கு விற்கப்பட வேண்டிய 500 மில்லி லீற்றர் குடிநீர் போத்தல் ஒன்றை அந்த விலையை விட அதிகமாக 230 ரூபாவிற்கு விற்பனை செய்த பண்டாரவளை, எல்ல பிரதேசத்தைச் சேர்ந்த தனியார் நிறுவனமொன்றிற்கு எதிராகவும் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்தநிலையில் குறித்த நிறுவனத்திற்கும் ஒரு மில்லியன் ரூபாய் அபராதம் விதித்து பண்டாரவளை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |