யாழ் - கொழும்பு தொடருந்து சேவை : விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
கொழும்பு–யாழ்ப்பாணம் தொடருந்து சேவையில் பொதுமக்களுக்கு சிரமத்தை ஏற்படுத்தும் தற்போதைய நேர அட்டவணைகள் மற்றும் பயணச்சீட்டுகளைப் பெறுவதில் நிலவும் சிக்கல்களுக்கு தீர்வு காணுமாறு சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் யாழ் மாவட்ட அமைப்பாளர் கீதநாத் காசிலிங்கம் தெரிவித்துள்ளார்.
கொழும்பு - யாழ் தொடருந்து சேவைகள் மீள ஆரம்பிக்கப்பட்டமை குறித்து இன்று வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் அவர் இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
அந்த செய்திக் குறிப்பில், “வடக்கு மற்றும் தெற்கு மக்களுக்கு அத்தியாவசியமான போக்குவரத்து சேவையாக விளங்கும், நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட கொழும்பு–யாழ்ப்பாணம் தொடருந்து சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டிருப்பதை நான் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.
பயணச்சீட்டுகளைப் பெறுவதற்கான வாய்ப்பு
இந்த முக்கியத் திட்டத்தை மீண்டும் செயற்படுத்திய இலங்கை மற்றும் இந்திய அரசுகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
எனினும், யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையில் பயணிக்கும் பலர் தற்போதைய தொடருந்து நேர அட்டவணைகள் தங்களுக்கு வசதியற்றதாக இருப்பதாகக் குறிப்பிட்டுள்ள நிலையில், பயணிகளின் தேவைகளுக்கு ஏற்ப அதிகாரிகள் அவற்றை மறுபரிசீலனை செய்வது அவசியமாகும்.

மேலும், வடக்கு மாகாணத்திற்கு பயணிப்பதற்கான மிகவும் மலிவான மற்றும் பொதுமக்கள் விரும்பும் போக்குவரத்து முறைகளில் ஒன்றாக தொடருந்து சேவை இருந்தாலும், பயணச்சீட்டுகளைப் பெற்றுக்கொள்வது சாதாரண பயணிகளுக்கு பெரும் சவாலாக இருக்கின்றதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.
அரச பணியாளர்களுக்கான உத்தரவாத (Warrant) முன்பதிவுகளின் மூலம் கணிசமான அளவு இருக்கைகள் முன்கூட்டியே ஒதுக்கப்படுவதால், பொதுமக்களுக்கு பயணச்சீட்டுகளைப் பெறுவதற்கான வாய்ப்புகள் குறைந்து வருகின்றன.
விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை
எனவே, இந்தப் பிரச்சினையை அரசாங்கம் மற்றும் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க கவனத்தில் கொண்டு, பொதுமக்களுக்கு ஏற்ற வகையில் தொடருந்து சேவை நேர அட்டவணைகளை மாற்றியமைப்பதோடு, பயணச்சீட்டுகளை நியாயமான முறையில் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பையும் உறுதிப்படுத்த வேண்டும்.

அத்துடன், யாழ்ப்பாணத்திலிருந்து அதிகாலை வேளையில் புறப்படும் தொடருந்து சேவைக்கான பொதுமக்களின் கோரிக்கை அதிகரித்து வருவதையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இதன் மூலம் பயணிகள் கொழும்புக்குச் சென்று தங்களது உத்தியோகபூர்வ அல்லது தனிப்பட்ட பணிகளை நிறைவேற்றி, அதே நாளில் மீண்டும் யாழ்ப்பாணத்திற்குத் திரும்ப முடியும்.
பொதுப் போக்குவரத்து சேவைகள் முதன்மையாக மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். அனைவருக்கும் பயணம் எளிதானதாகவும், பாதுகாப்பானதாகவும், அணுகக்கூடியதாகவும் இருக்க வேண்டும்,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |