எங்கள் உயிரின் பெறுமதி ஒரு இலட்சம் என்று தீர்மானிப்பதற்கு இவர்கள் யார்? - காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் கண்டனம்!
எங்கள் உயிரின் பெறுமதி ஒரு இலட்சம் என்று சொல்லி தீர்மானிப்பதற்கு இவர்கள் யார்? என வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் அரசின் அறிவிப்பு தொடர்பில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
இன்று மாலை முல்லைத்தீவு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளின் சங்கத் தலைவி ம.ஈஸ்வரி மற்றும் செயலாளர் பி.றஞ்சனா ஆகியோர் ஊடக சந்திப்பினை நடத்தினர் இங்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
இங்கு அவர்கள் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
காணாமல் போனோரின் குடும்பங்களை மீள்வாழ்வளிப்பதற்காக ஒருமுறை மாத்திரம் செலுத்தப்படும் கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அரசின் இந்த அறிவிற்கு வலிந்து காணமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் எதிர்ப்பினை தெரிவித்துள்ளார்கள்.
2016 ஆம் ஆண்டு 17 ஆம் இலக்க காணாமல் போனோர் பற்றிய அலுவலக சட்டத்தின் மூலம் காணாமல் போனோர் தொடர்பாக சரியான விசாரணைகளை நடாத்திய பின்னர் இறப்புச் சான்றிதழ் அல்லது காணக்கிடைக்கவில்லை என்ற சான்றிதழை வழங்குவதற்காக பதிவாளர் நாயகத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தால் கண்டறிப்பட்ட விடயங்களின் அடிப்படையில் பதிவாளர் நாயகத்தால் வழங்கப்பட்டு காணக்கிடைக்கவில்லை எனும் சான்றிதழைப் பெற்றுள்ள காணாமல் போன நபரின் நெருங்கிய உறவினருக்கு குடும்ப மீள்வாழ்வுக்காக ஒருமுறை மாத்திரம் செலுத்தப்படும் 100,000 ரூபாவை செலுத்துவதற்காக நீதி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.
எங்கள் உயிரின் பெறுமதி ஒரு இலட்சம் என்று சொல்லி தீர்மானிப்பதற்கு இவர்கள் யார்? எங்களின் உறவுகளின் பெறுமதியினை நன்கு புரிந்து வைத்திருப்பவர்கள் ஒரு இலட்சம் வேண்டாம் நாங்கள் இதனைவிட பத்து மடங்கு அல்லது இருபது மடங்கு பணத்தினை தருகின்றோம்.
நாங்கள் அவர்களிடம் கையளித்த உறவுகளை அவர்கள் தேடிக்கண்டறிந்து எங்களிடம் கையளிக்கட்டும் அவர்கள் தேடிக்கண்டறிந்து எங்களிடம் கையளிக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும்.
அரசாங்கத்தின் காணாமல் போனோர் அலுவலகம் ஊடாக அவர்களால் வழங்கப்படும் நட்டஈடு ஒரு இலட்சதித்தினையோ மரண சான்றிதழையோ, காணக்கிடைக்கவில்லை என்ற சான்றிதழையோ நாங்கள் பெற்றுக்கொள்ள தயாரக இல்லை உறவுகளுக்கு சரியான நீதி கிடைக்கும் வரை எங்கள் போராட்டம் தொடரும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளார்கள்.
