சர்ச்சையில் ஆசிரியர் இடமாற்றம் - கண்ணீர் சிந்தும் ஆசிரியைகள் - அதிகார மமதையில் அதிகாரிகள்
ஆசிரியர் இடமாற்ற கொள்கையில் முறைகேடுகள் திருத்தபடாவிடின் எதிர்வரும் புதன்கிழமை 4 ஆம் திகதி காலை பத்து மணியளவில் ஆளுநர் அலுவலகம் முன்பாக கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுக்கவுள்ளதாக இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது
யாழில் இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கத்தின் கலந்துரையாடல் நேற்று இடம்பெற்றுள்ளது.
இதனை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த பாதிக்கப்பட்ட ஆசிரியைகள் தமது கருத்தினை பின்வருமாறு பதிவு செய்தனர்.
10 வருடங்கள் மத்திய மாகாணத்தில் சேவை
வடமராட்சி வட இந்து மகளீர் கல்லூரி ஆசிரியை கருத்து தெரிவிக்கையில், தற்பொழுது ஆசிரியைகளாக கடமை புரிகின்ற நாம் கடந்த 2004 ஆம் ஆண்டு பட்டதாரிகள் வேலை வாய்ப்பின்றி இருந்த காலப் பகுதியில் மத்திய மாகாணத்தில் ஆசிரியர் பணிக்கு அமர்த்தப்பட்டோம்.
10 வருடங்கள் மத்திய மாகாணத்திலே ஆசிரிய சேவையை நிறைவு செய்துவிட்டு வட மாகாணத்திலே நான் பிறந்த யாழ்ப்பாணம் மாவட்டத்தின் வடமராட்சி மண்ணிலே சேவையாற்ற வேண்டும் என நான் அந்த இடமாற்றத்தை பெற்று வந்தேன்.
வட மாகாணத்தில் அழகியல் துறை பாடங்களுக்கு அதிகமான ஆசிரியர்கள் இருக்கின்றார்கள் என கூறியும் மிகவும் கடினப்பட்டு இந்த இடமாற்றத்தினை பெற்று இங்கு வருகிறது.
11 வருடங்கள் கடமையாற்றினேன், தற்பொழுது சேவை கருதி இடமாற்றம் என்ற போர்வையில் வவுனியா தெற்கு கல்வி நிலையத்திற்கு 48 வயதில் என்னை இடமாற்றம் பெற்றுச் செல்லுமாறு மாகாண கல்வி பணிப்பாளர் கூறுகின்றார்.
மீண்டும் தூர தேசம் செல்ல வேண்டும்
கடந்த பத்து வருடங்கள் மத்திய மாகாணத்தில் சேவையாற்றிய நான் மீண்டும் தூர தேசம் செல்ல வேண்டும் என்பதனை நினைக்கின்ற பொழுது என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
இந்த கோரிக்கைகளை இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கம் ஏற்று எமக்கு ஒரு நிரந்தர தீர்வை வழங்குவார்கள் என நான் எதிர்பார்க்கின்றேன்.
கிட்டத்தட்ட இன்று இலங்கை தாய் மொழி ஆசிரியர்கள் சங்கத்தின் கூட்டத்திற்கு 100 ஆசிரியர்களுக்கு மேல் வருகை தந்திருக்கின்றோம்.
நமக்கான தீர்வினை இந்த சங்கம் பெற்றுத்தருமென நாம் எதிர்பார்க்கின்றோம் என அவர் மேலும் தெரிவித்தார்.
குழந்தை செல்வம் இன்றி
இளவாலை புனித ஹென்றியரசர் பாடசாலை கணித ஆசிரியை அம்பாளிகை சத்தியசீலன் கருத்து தெரிவிக்கையில், செல்வி அம்பாளிகை என தலைப்பிட்டு எனக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.
திருமணமாகி ஆறு வருடங்கள் கடக்கின்ற பொழுதும் குழந்தை செல்வம் இன்றி நான் தற்பொழுது வாழ்ந்து வருகிறேன்.
நிபந்தனையுடனான அடிப்படையில் எந்த விதமான விடுமுறைகளும் பெறாது மாகாண கல்வித் திணைக்களத்தின் அறிவுறுத்தலுக்கு அமைவாக மூன்று வருடங்கள் அங்கு சேவையாற்றினேன்.
இடமாற்றங்கள் வழங்கப்படுகின்ற பொழுது அவர்களுடைய இடமாற்றங்கள் அனைத்தையும் நான் பின்பற்றியே வந்துள்ளேன்.
குழந்தை செல்வம் இன்றி
நான் குழந்தை செல்வத்தை பெறுவதற்காக மீளவும் சிகிச்சையில் ஈடுபட்டு வருகின்றேன் என்னுடைய தாயாருக்கும் வயதாகிவிட்டது.
இது என்னுடைய பிரச்சினை மாத்திரமல்ல என்னை போன்ற நிறைய பெண்களுக்குரிய பிரச்சனை வெளியே சொல்ல முடியாது அவர்கள் திணைக்களரீதியாக நெறிமுறைகளை பின்பற்றி வருகின்றனர்.
மேலதிகாரிகள் இது குறித்து கவனம் செலுத்தி எமது கோரிக்கைகளை பரிசீலித்து நடக்க வேண்டும் எமது சுயவிபரக்கோவைகளை சரியாக அணுகவேண்டும் என்னை செல்வி என்று குறிப்பிட்டு செல்வி என்றால் பிரச்சினை இல்லை என குறிப்பிட்டுள்ளனர். ஆகவே இலங்கை தாய் மொழி ஆசிரியர் சங்கம் இது குறித்து நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
செய்திகள் பிரதீபன்
