கடலில் மூழ்கியது 3000 கார்களுடன் தீப்பிடித்த சரக்கு கப்பல்
மெக்சிகோவிற்கு (Mexico) புதிய வாகனங்களை ஏற்றிச் சென்ற ஒரு சரக்குக் கப்பலில் தீப்பிடித்த நிலையில் சில வாரங்களுக்குப் பிறகு வடக்கு பசுபிக் பெருங்கடலில் மூழ்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குறித்த சரக்கு கப்பலில் 70 மின்சார கார்கள் உட்பட 3,000 புதிய கார்கள் இருந்தாக தெரிவிக்கப்படுகின்றது.
சீனாவின் யந்தாய் துறைமுகத்தில் இருந்து மே மாதம் 26ஆம் திகதி, வட அமெரிக்க நாடான மெக்சிகோவுக்கு 'மோர்னிங் மிடாஸ்' (Morning Midas) என்ற சரக்கு கப்பல் 22 ஊழியர்களுடன் புறப்பட்டுள்ளது.
கப்பல் நிறுவனம் உறுதி செய்தது
அமெரிக்காவின் அலாஸ்காவுக்கு (Alaska) தென்மேற்கே 490 கிலோ மீற்றர் துாரத்தில் பசுபிக் கடலில் சென்றபோது, இந்தக் கப்பலில் திடீரென தீப்பிடித்தது.
இதையடுத்து சரக்கு கப்பலை அப்படியே விட்டுவிட்டு, கப்பல் ஊழியர்கள் தப்பிச் சென்றுள்ளனர்.
தீயை அணைக்கும் பணியில் அமெரிக்க கடற்படையினர் ஈடுபட்ட நிலையில், மோசமான வானிலை மற்றும் கப்பலில் நீர்க்கசிவு ஏற்பட்டதை அடுத்து நேற்று முன்தினம் (24) குறித்த கப்பல் கடலில் மூழ்கியுள்ளது.
இந்த விடயத்தினை கப்பல் நிறுவனமான லண்டனை சேர்ந்த 'சோடியாக் மேரிடைம்' உறுதி செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
எனினும் அந்த சரக்கு கப்பலில் இருந்த 3000 கார்கள், அதில் இருந்து மீட்கப்பட்டதா என்பது தெரியவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
