தமிழர் தாயகத்தின் பூர்வீகம் அபகரிப்பு! குருந்தூர்மலையை மீட்போம்- ரவிகரன் சூளுரை!
முல்லைத்தீவு - தண்ணிமுறிப்புப் பகுதியில், தற்போது பௌத்தமயமாக்கல் முற்றுகைக்குள் உள்ள தமிழர்களின் பூர்வீக குருந்தூர்மலையினை விரைவில் மீட்போம் என வடமாகாணசபை முன்னாள் உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
அவ்வாறு குருந்தூர் மலையை மீட்பதற்காக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனுடன் இணைந்து வழக்குத் தொடர்வதற்கான முயற்சிகள் தீவிரமாக இடம்பெற்றுவருவதாகவும் தெரிவித்தார்.
அவ்வாறு வழக்குத் தொடர்வதற்கான ஆயத்தக்கட்டப்பணிகளில் பெரும்பாலான பணிகள் முடிவுக்கு வந்துள்ளதாகவும், எனவே குருந்தூர்மலையினை மீட்பதற்கான வழக்கு விரைவில் தொடரப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அண்மைக்காலமாக தமிழர்களின் பூர்வீக குருந்தூர்மலையில், தொல்லியல் ஆய்வு என்ற போர்வையில் அங்கு பௌத்த மயமாக்கல் செயற்பாடுகள் தீவிரமாக இடம்பெற்றுவருகின்றன. கடந்த 16.06.2021அன்றும் அங்கு கட்டடம் ஒன்று நிறுவுவதற்கான அடிக்கல் ஒன்றும் நாட்டப்பட்டுள்ளது.
இந்நிலையில் இது தொடர்பாக கருத்துத் தெரிவிக்கும்போதே ரவிகரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
தண்ணிமுறிப்புப் பகுதியில் அமைந்துள்ள குருந்தூர்மலை என்பது தமிழர்களின் பர்வீக வழிபாட்டுத்தலமாகும். அவ்வாறான பூர்வீக வழிபாட்டு இடத்திலேயே தற்போது பெரும்பான்மை இனத்தவர்கள், அரசதிணைக்களங்கள் மற்றும் பாதுகாப்புத் தரப்பினரின் அனுசரணையுடன் பௌத்த மதத் திணிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
குறிப்பாக கடந்த 2018.09.04ஆம் திகதி அன்று முல்லைத்தீவு – குருந்தூர் மலைப் பகுதியில் பௌத்த பிக்குகள் தலைமையிலான குழு ஒன்று, பௌத்த சின்னங்களுடனும், கட்டுமானப் பணிக்கான பொருட்களுடனும் வருகை தந்திருந்தனர். இதை அறிந்த நாம் குமுழமுனைக் கிராமமக்களுடன் சென்று, அவ்வாறு வருகைதந்தவர்களை வழிமறித்து ஒட்டுசுட்டான் பொலிசாரிடம் ஒப்படைத்திருந்தோம்.
இதன் பின்னர் இந்த விவகாரம் தொடர்பிலே ஒட்டுசுட்டான் பொலிசார் முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றிலே வழக்கொன்றினைத் தாக்கல் செய்திருந்தனர். அவ்வாறு ஒட்டிசுட்டான் பொலிசாரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு அமைய முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றில் வழக்கு விசாரணைகள் இடம்பெற்றன.
இவ்வாறு இடம்பெற்ற வழக்கு விசாரணைகளின் அடிப்படையில் கடந்த 13.09.2018 அன்றைய தினம் இந்த வழக்கு சார்பாக முல்லைத்தீவு நீதிமன்றத்தால் சில கட்டளைகள் வழங்கப்பட்டன. நீதிமன்றால் வழங்கப்பட்ட கட்டளைகளில் குறிப்பாக, தொன்று தொட்டு வழிபாட்டில் ஈடுபடும் கிராம மக்கள் இயற்கை முறையில் அமைந்த கிராமிய வழிபாட்டினை ஆலயத்தில் மேற்கொள்ள எந்தவித தடையும் இல்லை.
குறித்த பகுதியினுள் புதிதான கட்டுமானம் மற்றும் அகழ்வுப் பணி என்பன மேற்கொள்ளக்கூடாது. மேலும் தொல்பொருள் ஆய்வு என்ற பெயரில் வேறு மதத்தினைச் சேர்ந்த கோவில்களை அமைக்க முடியாது. அவ்வாறு அமைப்பதாகவிருந்தால் காவற்றுறையில் அறிக்கை சமர்ப்பித்து நீதிமன்றத்தின் அனுமதியுடனேயே மேற்கொள்ள முடியும்.
அதேவேளை குருந்தூர் மலையில் தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்வதாகவிருந்தால் யாழ் பல்கலைக்கழகத்தின் தொல்லியல் துறையினருடனும், மூத்த வரலாற்று ஆய்வாளர்களுடனும், குறித்த கிராமத்தினைச் சேர்ந்த அனுபவம் வாய்ந்தவர்களுடனும் மேற்கொள்ளப்படல் வேண்டும். அந்த பகுதிக்கு சம்மந்தம் இல்லாதவர்களான பௌத்த துறவிகள் வர முடியாது என பல கட்டளைகளை நீதிமன்று பிறப்பித்திருந்தது.
இவ்வாறாக கட்டளைகள் பிறப்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து கடந்த 27.09.2018 அன்று குறித்த வழக்கினை தொல்பொருள் திணைக்களத்தைச்சேர்ந்த சட்டத்தரணிகள் மூவர் நகர்த்தல் பத்திரம்(மோசன்) தாக்கல் செய்து வழக்கினை மீள விசாரணைக்கு எடுத்துக்கொண்டனர்.
இவ்வாறு மீள எடுத்துக்கொண்ட வழக்கு விசாரணைகளில் பௌத்த குருமார்களின் சார்பாக முன்னிலையான தொல்பொருள் திணைக்கள சட்டத்தரணிகள், குருந்தூர் மலைப்பகுதியில் 'குருந்த அசோகாராம' பௌத்த வழிபாட்டு தலம் இருந்துள்ளது என்றும், வர்தகமானியில் அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது என்றும் இதன் படி அது தொடர்பில் ஆய்வு செய்யவே 04.09.2018அன்று தேரர்கள் தலைமையிலான குழுவினர் சென்றதாகவும் நீதிமன்றிலே தெரிவித்தனர்.
இந்த சம்பத்தினை பிரதேசத்தில் உள்ள அரசியல்வாதிகள் குறிப்பாக வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் போன்றோர் மக்களை திரட்டி குழப்பத்தை விளைவித்துள்ளனர் என்றும், உண்மைக்கு புறம்பாக விகாரை அமைக்கும் முயற்சி என திரிவுபடுத்தி தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும் பௌத்த தேரர்கள் சார்பில் மன்றில் முன்னிலையான சட்டத்தரணிகள் மேலும் நீதிமன்றில் தெரிவித்தனர்.
இதேவேளை குருந்தூர்மலைப்பகுதியில் தொல்பொருள் ஆய்வினை மேற்கொள்ளவே தாங்கள் வந்துள்ளதாக மன்றில் தெரிவித்ததுடன், அதற்கு அனுமதி வழங்குமாறும் கோரியிருந்தனர். இவற்றினை ஆராய்ந்த நீதவான், இது தொடர்பிலான வழக்கு விசாரணைளை 01.10.2018ஆம் நாளுக்குத் திகதியிட்டிருந்தார். மேலும் அடுத்த தவணையின் போது வழக்குத் தாக்கல் செய்து அறிக்கை சமர்ப்பித்த பொலிசார் பாதிக்கப்பட்டவர் சார்பிலும், சம்பந்தப்பட்டவர் சார்பிலும் இருந்து ஒரு முழுமையான அறிக்கை தயாரிக்கப்பட்டு அவ்வறிக்கை மன்றில் சமர்ப்பிக்கப்படவேண்டும் என நீதிமன்று பொலிசாருக்கு உத்தரவிட்டிருந்தது.
இவ்வாறு நீதிமன்றில் வழக்கு நடைபெற்றுக்கொண்டிருந்தாலும் பௌத்தமயமாக்கல் என்பது தீவிரமாகவே முன்னெடுக்கப்பட்டுக்கொண்டிருந்தது.
இந்நிலையில் இவ்வாறு குருந்தூர் மலையில் காணாமல் ஆக்கப்பட்ட தமிழர்களின் வழிபாட்டு அடையாளங்கள் தொடர்பிலும், அங்கு இடம்பெறும் தொல் பொருள் ஆய்வு தொடர்பிலும் வழக்கொன்றை தொடர்வது தொடர்பில் நாம் முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றோம்.
அவ்வாறு வழக்கொன்றினைத் தொடர்வதற்கு தமிழ்தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனை சந்தித்து பேசியதுடன், வழக்கினைத் தொடர்வதற்கான ஆவணங்களையும் அவரிடம் கையளித்துள்ளோம். இந்நிலையில் வழக்குத் தொடர்வதற்கான முழுமுயற்சி தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.
இதற்கிடையிலே தான் கடந்த 10.05.2021அன்று தொடக்கம் 11.05.2021வரையில் குருந்தூர்மலையில் தற்போதுள்ள கொவிட்-19 சுகாதார நடமுறைகளை மீறி பௌத்த வழிபாட்டு நிகழ்வொன்று இடம்பெற்றிருந்தது. இது தொடர்பாக அப்பகுதிமக்கள் எமக்கு முறையிட்டதற்கமைய, அது தொடர்பில் ஆராய்வதற்காக குருந்தூர் மலைக்குச் சென்றிருந்தோம்.
அங்குசென்றபோது இராணுவத்தினர் குருந்தூர்மலைப் பகுதிக்குள் செல்வதற்கு அனுமதி மறுத்தனர். பின்னர் தொலைபேசி அழைப்பொன்றினை ஏற்படுத்திவிட்டு எம்மை உள்ளே செல்வதற்கு அனுமதித்திருந்தனர். அங்கு குருந்தூர் மலை அடிவாரத்திற்குச் சென்றபோது அங்கும் இராணுவத்தினர் பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டிருந்தனர். அவ்வாறு பாதுகாப்புக்கடமையில் ஈடுபட்டிருந்த இராணுவத்தினர் குருந்தூர் மலையின் மேற்பகுதிக்குச் செல்வதற்கு அனுமதி மறுத்தனர்.
அத்தோடு குறித்த இராணுவத்தினர் கொவிட் -19 சுகாதார வழிமுறைகளைப் பின்பற்றாத நிலையினையும் எம்மால் அவதானிக்க முடிந்தது. எனவே நாம் அவர்களிடம் கொவிட்-19 சுகாதார வழிமுறைகளை பின்பற்றாதமை தொடர்பில் வினவியபோது அவர்கள் சற்றுத் தடுமாறியதுடன் உடனேயே அவர்கள் முகக் கவசங்களை அணிந்துகொண்டனர். அதேவேளை அங்கு இடம்பெற்ற நிகழ்வு தொடர்பில் இராணுவத்தினரிடம் விசாரித்தோம்.
அதற்கு அவர்கள் அங்கு ஓர் வழிபாட்டு நிகழ்வொன்று இடம்பெற்றதாக எம்மிடம் தெரிவித்திருந்தனர். மேலும் இது தொடர்பில் அப்பகுதி பொதுமக்கள் என்னிடம் முறையிடும்போது, பௌத்த பிக்குகள் கிட்டத்தட்ட 29பேர் அங்கு வந்திருந்ததாகவும், அத்தோடு கிட்டத்தட்ட30 முச்சக்கரவண்டிகள் அங்கு வந்ததாகவும் அதில் வந்தவர்கள் பொதுமக்களாக இருக்கலாம் எனவும் தெரிவித்தனர்.
இதுதவிர ஒன்று, இரண்டு, மூன்று ஆகிய நட்சத்திரத் தரங்களில் உள்ள அதி சொகுசு இராணுவ வாகனங்கள், ஐம்பதிற்கும் மேற்பட்ட சொகுசுவாகனங்கள், இராணுவ வாகனங்கள் என பல வாகனங்கள் அங்கு சென்றதாகவும் பொதுமக்கள் எம்மிடம் முறையிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையிலே மீண்டு குருந்தூர் மலையில் கட்டடம் ஒன்று அமைப்பதற்கு கடந்த 16.06.2021 அன்று அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.
இவ்வாறாக தமிழர்களின் பூர்வீக வழிபாட்டிடமான குருந்தூர்மலையினை பௌத்த மயப்படுத்த தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே நாம் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், ஜனாாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரனு இணைந்து வழக்கு ஒன்றினைத் தொடர்வதற்கான தீவிர முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம்.
அந்த வழக்கினைத் தொடர்வதற்கு பாரிய அளவில் ஆவணங்களைத் திரட்டியுள்ளோம். வழக்குத் தொடர்வதற்கான பெரும்பகுதி வேலைத்திட்டங்கள் முடிவுற்றுள்ளன. எனவே விரைவில் வழக்குத் தொடரப்படும்.
அவ்வாறு எம்மால் தொடரப்படும் வழக்கின் ஊடாக, தமிழர்களின் காணாமல் ஆக்கப்பட்ட வழிபாட்டு அடையாளங்களை மீள நிறுவுவதற்கும், எமது பூர்வீக குருந்தூர்மலையில் இடம்பெறும் பௌத்த மயமாக்கல் செயற்பாட்டை தடுப்பதற்குமான முழுயற்சிகளையும் தீவிரமாக மேற்கொள்வோம் எனவும் தெரிவித்துள்ளார்.