நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார் ரவிகரன்
எங்கள் பெருமை மிகு வரலாற்றின் சோகமான இறுதிக் காட்சிகளின் மௌனமான சாட்சியே இந்த நந்திக்கடல் என வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.
ஏராளமான எங்கள் உறவுகளின் கண்ணீரும், செந்நீரும் கலந்துள்ள இந்தக் கடலன்னையை வணங்கி, உயிர்நீத்த எங்கள் உறவுகளுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினோம்” என கூறியுள்ளார்.
முள்ளிவாய்க்காலில் உயிர் நீத்த உறவுகளுக்கு நந்திக்கடலில் மலர்தூவி அஞ்சலி செலுத்திய பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி
முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 16 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று (18.05.2025) ஆகும்.
இதன்போது, நந்திக்கடலில் மலர்தூவி, சுடரேற்றி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தப்பட்டது.
இதனைத் தொடர்ந்து வற்றாப்பளை கண்ணகியம்மன் ஆலயத்தில் உயிரிழந்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி பிராத்தனையும் மேற்கொள்ளப்பட்டது.
மேலும் இந்த அஞ்சலி நிகழ்வுகளில் உள்ளூர் அதிகாரசபைகள் தேர்தல்லில் கரைதுறைப்பற்று பிரதேசசபையில் இலங்கைத் தமிழரசுக் கட்சி சார்பாக போட்டியிட்டு வெற்றியீட்டியவரான இரத்தினம் ஜெகதீசனும் இந்த அஞ்சலியில் பங்கேற்றிருந்தனர்.
