தமிழர் பகுதிகளில் தொடரும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்கள்...!
🛑 புதிய இணைப்பு
முள்ளிவாய்க்கால் கஞ்சி வழங்கும் நிகழ்வுகள் வடகிழக்கு ரீதியாக இடம்பெற்று வருகின்றன.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் போரதீவுபற்று பிரதேச சபைக்கு முன்பாக நேற்று (15-05-2026) முள்ளிவாய்க்கால் கஞ்சி காய்ச்சி, சிரட்டைகளில் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.
அப்பகுதி பொதுமக்களால் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது அங்கிருந்த மக்கள் விருப்புடன் கலந்து கொண்டு முள்ளிவாய்க்கால் கஞ்சியை அருந்தியமை குறிப்பிடத்தக்கது.
🛑 செய்திகள் - Shagthivel Vadivel



🛑 முதலாம் இணைப்பு
முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் ஊர்தி பவனி நேற்று (15-05-2026) காலை மன்னாரை வந்தடைந்தது.
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் நல்லூர் தியாகதீபம் திலீபனின் நினைவிடத்துக்கு முன்பாக ஆரம்பமான ஊர்தி பவனி, ஓமந்தை ஊடாக வவுனியா சென்று நான்காவது நாளான வெள்ளிக்கிழமை மன்னாரை வந்தடைந்தது.
மன்னார் பேருந்து தரிப்பிடம் மற்றும் மாவட்ட பொது வைத்தியசாலை வீதி ஆகிய இரு இடங்களிலும் குறித்த ஊர்தி நிறுத்தப்பட்ட நிலையில், அங்கு மக்கள் மலர் தூவி அஞ்சலி செலுத்தியுள்ளனர்.
அத்துடன் நகர வீதியூடாகச் சென்ற ஊர்தி பவனியை உணர்வெழுச்சியுடன் வரவேற்ற மக்கள் தமது அஞ்சலிகளைச் செலுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
🛑 செய்திகள் - Nayan Nayan



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |



