கழிவுப் பொருட்களுக்கு தீ வைத்த மாநகரசபை - வீதியால் செல்லும் மக்கள் அவதி
புதிய இணைப்பு
மானிப்பாய் பிரதேச சபை எல்லைக்குட்பட்ட கல்லூண்டாய் பகுதியில் யாழ்ப்பாணம் மாநகர சபையினர் (Jaffna Municipal Council) கழிவுப் பொருட்களை சேகரித்து வருகின்றனர்.
குறித்த கழிவு சேகரிக்கும் பகுதிக்கு தொடர்ச்சியாக தீ வைத்து வருவதால் வீதியால் செல்லும் பயணிகளும், அண்டியுள்ள பகுதிகளில் வசிக்கும் மக்களும் பல்வேறு இன்னல்களை எதிர்நோக்கி வருகின்றனர்.
அந்தவகையில், குப்பை மேட்டுக்கு தீ வைத்ததால் அதன்மூலம் வெளியான புகை வீதியெங்தும் பரவியதால் வீதியால் செல்லும் மக்கள் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளனர்.
மாநகரசபையின் இவ்வாறான அநாகரீகமான செயற்பாடுகள் குறித்து பல தடவைகள் செய்திகள் வெளியாகியபோதும் அவர்கள் தொடர்ந்தும் இவ்வாறு செய்வது மக்களை பற்றிய அக்கறை இல்லாத தன்மையை எடுத்துக் காட்டுகின்றது என மக்கள் தெரிவித்தனர்.
முதலாம் இணைப்பு
நீதிமன்றம் அதிரடி உத்தரவு
காரைக்கால் சிவன் கோவிலுக்கு அருகாமையில் நல்லூர் பிரதேச சபையினால் திண்மக் கழிவுகள் கொட்டப்படுவதற்கு எதிராக நீதிமன்றம் அதிரடி உத்தரவு 09.06.2025 சமூக செயற்பாட்டாளர்களான லோ.கோகிலன் த.சித்தார்த்தன் பி.வத்சாங்கன் சி.சிவசங்கர் வ.நவநீதன் ஆகியோரால் சட்டத்தரணி நவநீதன் அவர்கள் ஊடாக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த குப்பை சேமிக்கும் இடத்தில் மருத்துவ இலத்திரனியல் இரசாயன பொலித்தீன் பிளாஸ்டிக் கழிவுகளை தரம் பிரிக்காமல் பல ஆண்டுகளாக தொடர்ச்சியாக கொட்டப்பட்டு சமூக சீர்கேட்டை உருவாக்கியமையால் அப்பகுதி மக்கள் சுத்தமான காற்றை சுவாசிக்க முடியாமல் துர்நாற்றம் வீசியும் நிலத்தடி நீரை சுத்தமாக குடிக்க முடியாமலும் நிம்மதியாக உறங்க முடியாமல் வசிக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டமையினால் சகலருக்கும் முறைப்பாடு செய்திருந்தனர்.
அதிரடி தடையுத்தரவு
எனினும் இதுவரையிலும் காத்திரமான முடிவு எடுக்கப்பட முடியாத நிலையில் ஒரு வாரத்திற்கு முதல் அப்பகுதி திண்மக்கழிவுகள் இனந்தெரியாதோரால் எரியூட்டபட்ட நிலையில் மாவட்ட செயலகத்தின் முன்பு ஊர் மக்கள் சமூக செயற்பாட்டாளர்களால் போராட்டத்தினை செய்து அரச அதிபரிடம் மகஜர் கையளிக்கப்பட்டிருந்தது.
அதேவேளை சட்டத்தரணி நவநீதன் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து மேற்படி பிரச்சனை ஒரு பொதுத் தொல்லையாகவும் சூழல் மாசடையக் கூடிய வகையில் காணப்படுகின்ற வாதத்தை முன்வைத்து வாதடியமையால் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் நீதிபதி லெனின் குமார் குப்பைகள் கொட்டப்படக் கூடாது எனவும் அங்கிருக்கும் குப்பைகளை பிறிதொரு இடத்திற்கு அகற்றப்பட வேண்டும் என்றும் அதிரடி தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
