எல்லை மீறி விட்டேன்..! ட்ரம்ப்பிடம் சரணடைந்த எலோன் மஸ்க்
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்(Donald Trump) மற்றும் டெஸ்லா நிறுவனர் எலோன் மஸ்க்(Elon Musk) இடையிலான கருத்து வேறுபாடுகள் சமீபத்தில் பெரும் சர்ச்சையையும், சர்வதேச அளவில் பரபரப்பையும் உருவாக்கியிருந்தன.
அமெரிக்க அரசின் புதிய வரி மற்றும் செலவுத் திட்டங்களை விமர்சித்த மஸ்க், ட்ரம்ப் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட ‘பிக் பியூட்டிஃபுல் பில்’ எனும் வரிக்குறைப்பு சட்டமூலத்தை திறந்தவெளியில் கடுமையாக விமர்சித்தார்.
சுயநினைவை இழந்த மஸ்க்
இதனையடுத்து, டரம்ப் தனது அரசாங்கம் மஸ்க்கின் நிறுவனங்களுக்கு வழங்கும் மானியங்கள் மற்றும் ஒப்பந்தங்களை நிறுத்துவதாக எச்சரிக்கை விடுத்ததாக தகவல்கள் வெளியாகின.
பின்னர், எப்ஸ்டீன் தொடர்பான கோப்புகளில் ட்ரம்பின் பெயர் இடம்பெற்றுள்ளதாகவும், அதன் விசாரணை விவரங்கள் உள்நோக்கத்துடன் மறைக்கப்படுகிறதெனவும் மஸ்க் சமூக ஊடகங்களில் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதிலளித்த ட்ரம்ப் “மஸ்க் சுயநினைவை இழந்துள்ளார்” எனக் கூறி, அவருடன் பேச முடியாது என்றார்.
அளவு மீறிய கருத்துகள்
இந்நிலையில், ஏற்பட்ட மோதலுக்கு பின் அமைதியைக் கட்டமைக்கும் வகையில், எலோன் மஸ்க் டொனால்ட் ட்ரம்ப் குறித்து முன்னர் வெளியிட்ட கருத்துகள் அளவு மீறியதாகவும், அதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் தனது எக்ஸ் (ட்விட்டர்) கணக்கில் பதிவிட்டுள்ளார்.
“கடந்த வாரம் ஜனாதிபதி ட்ரம்ப் குறித்து எழுதிய சில கருத்துகள் தேவையற்ற அளவுக்கு சென்றுவிட்டன. அதற்காக நான் வருந்துகிறேன்” என மஸ்க் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், இருவருக்கும் இடையே ஏற்பட்ட முரண்பாடு இறுதியாக அமைதியுடன் முடிவுக்கு வருமா என்பது தற்போது பலரது கவனத்தை பெற்றுள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
