இராணுவத்தினால் சிறைப்பிடிக்கப்பட்ட ஆங் சான் சூகி! பொரிஸ் ஜோன்சன் சீற்றம்
மியன்மார் நாட்டில் இராணுவப் புரட்சி ஏற்பட்டுள்ளதற்கு பிரிட்டன் பிரதமர் பொரிஸ் ஜோன்சன் கடும் கண்டனம் வெளியிட்டுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, மியன்மாரில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.
மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்பட 90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி அறிவித்தது.
இந்தநிலையில் ஆங் சான் சூகி இராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மியன்மாரில் ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் இராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், "இராணுவப் புரட்சிக்குக் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். சட்டவிரோதமாக பொது மக்களையும், ஆங் சான் சூகி போன்ற தலைவர்களையும் சிறைபிடித்து வைத்திருப்பது கண்டனத்துக்குரியது. தேர்தலில், மக்களின் தீர்ப்பை மதிக்க வேண்டும்.
தலைவர்களை விடுவிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மியன்மாரில் இராணுவ ஆட்சி தொடர்ந்தால், பொருளாதார தடைகள் விதிக்க நேரிடும் என்று அமெரிக்காவின் புதிய அதிபரான ஜோ பைடன் எச்சரித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.