நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலய திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல்!
நயினாதீவு ஸ்ரீ நாகபூசணி அம்மன் ஆலய திருவிழா தொடர்பான முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் இடம்பெற்றுள்ளது.
மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் இன்று (10.06.2025) கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
இக் கலந்துரையாடல் தலைமையுரையாற்றிய அரசாங்க அதிபர், நயினாதீவு ஸ்ரீ நாக பூஷணி அம்மன் கோவில் உயர் திருவிழா எதிர்வரும் 2025.06.15ஆம் திகதி தொடக்கம் 2025.06.30ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாகவும், கடந்த திருவிழாவில் அடையாளம் காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்ய வேண்டிய தேவை காணப்படுவதாகவும், குறிப்பாக கடற்போக்குவரத்து பாதுகாப்பு தொடர்பாக பாரிய சவால்கள் காணப்படுவதாகவும் தெரிவித்தார்.
திருவிழா ஏற்பாடுகள்
மேலும், கடந்த வருட திருவிழா ஏற்பாடுகளில் கற்றுக் கொண்ட பாடத்தினை அடிப்படையாகக் கொண்டு இம் முறையும் உயர் திருவிழாவினை மேலும் சிறப்பாக நடைபெற அனைவரின் ஒத்துழைப்பினையும் வழங்குமாறு கேட்டுக்கொண்டார்.

இக் கலந்துரையாடலில் பின்வரும் ஏற்பாடுகளை மேற்கொள்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.
01.பாதுகாப்பிற்கு தேவையான காவல்துறை உத்தியோகத்தர்கள்
- முதல் 10 நாள் வரை 25 காவல்துறை உத்தியோகத்தர்களையும், இறுதி 5 நாட்களும் சப்பறம், தேர், தீர்த்தம் மற்றும் பூங்காவன உற்சவங்கள் வரை மேலும் 50 காவல்துறை உத்தியோகத்தர்களையும் சேவையில் ஈடுபடுத்துவது எனவும், குறிகட்டுவானில் முதல் 10 நாள் வரை 5 பேரும் இறுதி 5 நாட்களில் மேலும்10 பேரும் சேவையில் ஈடுபடுத்துவது எனத் தீர்மானிக்கப்பட்டது.
02.திருவிழாவிற்காக 42 தனியார் படகுகள் தயார் நிலையில் உள்ளதாகவும், அதனை வணிக கப்பல் துறை செயலக உத்தியோகத்தர்கள், பிரதேச செயலாளர் தலைமையிலான குழு பரிசீலனை மேற்கொள்ளவதுடன் இந்த 42 படகுகளை தவிர வேறு படகுகளில் பக்தர்களை ஏற்ற முடியாது எனவும், அவ்வாறு வேறு படகுகளில் ஏற்றினால் பொலிஸாரின் நடவடிக்கை உட்படுத்தப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
03.படகோட்டிகள் மது பாவனையில் இருந்தால் படகும் அதன் ஓட்டுனரும் மூன்று மாதங்களுக்கு அப் படகினை ஓட்டுவதற்கு தடை விதித்தல் எனவும், இதற்கு படகு உரிமையாளர் சங்கம் பூரண ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
போக்குவரத்து ஒரு வழிக் கட்டணம்
04.நயினாதீவு பிரதேசத்தில் ஒலிபெருக்கி மூலம் - படகுகளில் பயணிக்கும் போது உயிர்காப்பு அங்கி அணியாது பயணிப்பது தடை விதிக்கப்பட்டுள்ளது எனவும், மதுபோதையில் படகுகள் செலுத்துவது தண்டனைக்குரிய குற்றம் எனவும் மக்கள் சமூக பொறுப்புடன் செயல்படுமாறும் அறிவிக்குமாறு பிரதேச செயலாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

05.படகுகளில் பக்தர்கள் உயிர்காப்பு அங்கிகள் அணியாது பயணிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டதுடன், பயன்படுத்தப்படும் உயர்காப்பு அங்கிகள் பாவணைக்கு உகந்தவையா எனவும் வேலணை பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், காவல்துறை , கடற்படை ஆகியோர் இணைந்து பரிசீலனை செய்வது எனத் தீர்மானிக்கப்பட்டது.
06.சாரணர்களின் சேவைகளை பெற்றுக்கொள்வது மற்றும் இறுதி இரு திருவிழாவிற்கும் யாழ்ப்பாண மாவட்ட சாரணர்களின் சேவைகளை பெற்றுக்கொள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது.
07.குறிகட்டுவானிலிருந்து ஆலயம் செல்வதற்கான படகு போக்குவரத்து ஒரு வழிக் கட்டணம் 100.00 ரூபாய் எனவும் தீர்மானிக்கப்பட்டது. அத்தோடு கடற்போக்குவரத்து (படகு) நயினாதீவிலிருந்து காலை 6.00 மணிக்கும் குறிகட்டுவானிலிருந்து காலை 6.30 மணிக்கும் போக்குவரத்து சேவை நடைபெறவும் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டது.
08.குறிகட்டுவான் துறைமுகத்தின் உள்நுழைவு வரை வாகனங்கள் தரித்து நிற்பதனை தடுப்பது எனவும் தீர்மானிக்கப்பட்டது.
09.நயினாதீவுக்கு கட்டடப் பொருட்களை குறிப்பாக கல் மற்றும் மணல் என்பவற்றை எடுத்துச் செல்வது குறிகட்டுவானிலிருந்து பி. ப 4.00 மணிக்கு பின்னர் ஏற்றலாம் எனவும் தீர்மானிக்கப்பட்டது.
தனியார் வீதிப்போக்குவரத்து சேவை
10.யாசகம் பெறுவோர் மற்றும் சிறுவர்கள் வியாபாரத்தில் ஈடுபடுத்துவதை கண்காணிப்பதற்கு முதல் 10 திருவிழாக்களுக்கும் ஒரு நாளுக்கு மூன்று பேரும் இறுதி ஐந்து திருவிழாக்களுக்கும் ஆறு பேருமாக பிரதேச செயலகங்களில் கடமையாற்றும் சிறுவர் மேம்பாட்டு உத்தியோகத்தர், நன்னடத்தை உத்தியோகத்தர், உளவளத்துணை உத்தியோகத்தர், கலாசார உத்தியோகத்தர் உள்ளடங்கியவகையில் உத்தியோகத்தர்கள் கண்காணிப்பு கடமையில் ஈடுபடுத்தல் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

11.தனியார் மற்றும் அரச சேவை வீதிப்போக்குவரத்து சேவை கட்டணம் ரூபா 184.00 எனவும் தீர்மானிக்கப்பட்டது.
12.கோயில் கோபுரத்திற்கு முன்பக்கமாக தனியார் கடைகள், தாகசாந்தி நிலையம் அமைப்பதனை தவிர்க்குமாறு பிரதேச சபைக்கு அறிவுறுத்தப்பட்டது மேலும், குடிநீர் தேவைப்பாடுகள், வைத்திய சேவை, சுகாதாரம், மின்சாரத் தேவை, அம்புலன்ஸ் சேவை, இலங்கை செஞ்சிலுவை மற்றும் சென் ஜோன்ஸ் படையினர் சேவை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பிலும் விரிவாக கலந்துரையாடப்பட்டன.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
மண்டைதீவு படுகொலை … கடலால் சூழப்பட்ட ஒரு தீவின் இரத்த நினைவுகள்... 2 மணி நேரம் முன்