நாமலை சிறையில் அடைத்தாலும் அங்கிருந்து அவரை ஜனாதிபதியாக்குவோம் : முன்னாள் அமைச்சர் சூளுரை
சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச சிறையில் அடைக்கப்பட்டாலும், சிறையிலிருந்தே அவரை நாட்டின் ஜனாதிபதியாக நியமிக்க தமது கட்சி நடவடிக்கை எடுக்கும் என முன்னாள் அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
இது தெடார்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாமலை ஜனாதிபதியாக்கும் நடவடிக்கையின் முதல் கட்டம்
தற்போதைய அரசாங்கம் மகிந்த ராஜபக்ச மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகிய முன்னாள் ஜனாதிபதிகள் உட்பட முன்னாள் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறையில் அடைக்க முயற்சிப்பதாகவும், நாட்டின் ஒரே நம்பகமான நிறுவனமான நீதிமன்றத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை கூட ஆட்சியாளர்கள் தகர்க்க முயற்சிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

நாமல் ராஜபக்சவை ஜனாதிபதியாக்கும் நடவடிக்கையின் முதல் கட்டமாக செப்டம்பர் 12 ஆம் திகதி அனுராதபுரம் சல்காது மைதானத்தில் மக்கள் பேரணி நடைபெறவுள்ளதாகவும், அதில் யாரும் எதிர்பாராத அளவுக்கு பெருமளவிலான மக்கள் கலந்துகொள்ளவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
கடந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்த பெருமளவிலான மக்களும் எதிர்வரும் 12ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் கலந்துகொண்டு நாமல் ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவிக்க தயாராக இருப்பதாகவும் கிராம மட்ட அமைப்பு நடவடிக்கைகளில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மகிந்த,கோட்டாபயவை சிறையில் அடைக்க முயற்சி
“பலர் மகிந்த ராஜபக்சவை சிறையில் அடைக்க முயற்சிக்கின்றனர். கோட்டாபய ராஜபக்சவை சிறையில் அடைக்க முயற்சிக்கின்றனர். சில அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களை சிறையில் அடைக்க முயற்சிக்கின்றனர். அது ஒரு பிரச்சனையல்ல. நீதிமன்றத்தின் மீது எங்களுக்கு பெரிய நம்பிக்கை உள்ளது.

எஞ்சியிருப்பது நீதிமன்றத்தின் மீதான நம்பிக்கை மட்டுமே. அதையும் தகர்க்க தற்போதைய அரசாங்கம் முயற்சிக்கிறது. நாமல் ராஜபக்சவை சிறையில் அடைத்தாலும், சிறையிலிருந்தே அவரை ஜனாதிபதியாக்குவோம்.” என்றார்.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |