கடலில் மிதந்து வந்த பொதிகள்..! அழிவில் விளிம்பில் இலங்கை: அதிர்ச்சியில் காவல்துறை
நாட்டின் தென் கடல் பகுதியில் இருந்து மீட்கப்பட்ட 51 பொதிகளில் சுமார் 839 கிலோ போதைப்பொருட்கள் அடங்கியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.
இலங்கை கடற்படையினர் (Sri Lanka Navy) மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போதே இவை கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது
மீட்கப்பட்ட போதைப்பொருட்களில், 670 கிலோ 676 கிராம் ஐஸ் ரக போதைப்பொருள், 156 கிலோ 542 கிராம் ஹெரோயின் மற்றும் 12 கிலோ ஹேஷ் ஆகியவை உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடத்தல்காரருக்குச் சொந்தமானது
இந்த போதைப்பொருள் மொத்தமாக 839 கிலோ 254 கிராம் எடை கொண்டது எனவும், போதைப்பொருள் கடத்தல் மற்றும் விநியோகத்தை தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்த மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் கடற்படை குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை இந்த போதைப்பொருட்கள் உணாகுருவே சாந்த என்ற போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமானது என்றும் சந்தேகிக்கப்படுவதாக கடற்படை குறிப்பிட்டுள்ளது.
மூன்று படகுகள் ஊடாக நாட்டுக்கு போதைப்பொருள் கொண்டு வரப்படவுள்ளமை குறித்து காவல்துறை போதைப்பொருள் பணியகத்துக்கு கடந்த செப்டம்பர் மாதம் முதற்பகுதியில் தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.
அதன்படி, காவல்துறை மா அதிபரின் நேரடி மேற்பார்வையின் கீழ் கடற்படை மற்றும் காவல்துறை போதைப்பொருள் பணியகம், தேவேந்திரமுனை மற்றும் தங்காலை கடற் பகுதிகளில் 32 நாட்கள் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டன.
போதைப்பொருட்கள் இருப்பதாக உறுதி
இதன்போது, அவர்கள் சம்பந்தப்பட்ட படகுகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திய போதிலும் எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெற்றிருக்கவில்லை.
படகுகளின் இருப்பிடத்தை அடையாளம் காண்பதற்காக, அதில் நிறுவப்பட்ட VMS அமைப்பையும் செயலிழக்கச் செய்யப்பட்டது.
இதனையடுத்து, விமானப்படையின் உதவியும் கோரப்பட்டிருந்த நிலையில், குறித்த 3 படகுகள் தொடர்பில் எவ்வித தகவல்களும் கிடைக்கப்பெறவில்லை.
இந்தநிலையில், நேற்றையதினம் கண்டுபிடிக்கப்பட்ட பொதிகளில் போதைப்பொருட்கள் இருப்பதாக உறுதி செய்யப்பட்டதால், சந்தேகநபர்கள் அதனை கடலில் வீசிச் சென்றிருக்கலாம் என சந்தேகிப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
