அனைத்து அரச அலுவலகங்களிலும் தேசிய நேர்மை வாரம் ஆரம்பம்!
ஜனாதிபதி செயலகம் மற்றும் நாடு முழுவதிலும் உள்ள அனைத்து அரச அலுவலகங்களிலும் “நேர்மையான கலாசாரம் – க்ளீன் சிறிலங்கா” எனும் தொனிப்பொருளின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள 2026 ஆம் ஆண்டுக்கான தேசிய நேர்மை வாரம் இன்று (27) ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் 31 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ள இந்த திட்டம், இன்று காலை 9 மணிக்கு தேசிய நேர்மைப் பிரமாணத்தை ஏற்றுக்கொள்ளல் மற்றும் புதிய ஒழுக்கக் கோவையை அறிமுகப்படுத்தல் ஆகியவற்றுடன் உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது.
ஜனாதிபதியின் செயலாளர் நந்திக சனத் குமாநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையின் ஊடாக அறிவிக்கப்பட்ட இந்தத் திட்டம், ஜனாதிபதி செயலகம் மற்றும் 'க்ளீன் சிறிலங்கா' திட்டத்தினால் இணைந்து நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
ஊழலற்ற ஆட்சிமுறை
அரச சேவையின் தரம், செயற்திறன் மற்றும் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்துவதுடன், ஊழலற்ற ஆட்சிமுறையை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இந்த வாரத்துக்கான நிகழ்ச்சிகள் தினசரி அடிப்படையில் பின்வரும் தொனிப்பொருள்களில் கட்டமைக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி, ஜூலை 27: நிறுவன ரீதியான நேர்மையை ஊக்குவித்தல், ஜூலை 28: நிதியியல், டிஜிட்டல், தொழில்முனைவு மற்றும் தொழில்நுட்ப நேர்மையை ஊக்குவித்தல், ஜூலை 29: ஆன்மீக, ஒழுக்கவியல், கலாசார மற்றும் சமூக நேர்மையை ஊக்குவித்தல், ஜூலை 30: செயற்பாட்டு, உள்கட்டமைப்பு, சேவை வழங்கல் மற்றும் தொழிலாளர் நேர்மையை ஊக்குவித்தல். ஜூலை 31: சுற்றுச்சூழல், வள முகாமைத்துவம், கிராமப்புற மற்றும் சமூக வலுவூட்டல் நேர்மையை மேம்படுத்தல் என்பனவாகும்.
ஜனாதிபதி ஊடகப்பிரிவு
ஜனாதிபதி செயலகத்தின் வழிகாட்டுதலின் கீழ், ஒவ்வொரு அரச நிறுவனத்திலும் உள்ள உள்நாட்டலுவல்கள் பிரிவுகள் மூலம் ஊழல், துஷ்பிரயோகம் அல்லது நிர்வாகக் குறைபாடுகள் தொடர்பான பொதுமக்களின் முறைப்பாடுகள் ஏற்றுக்கொள்ளப்படும்.

இந்த முறைப்பாடுகளை QR குறியீடு, மின்னஞ்சல், அஞ்சல், தொலைபேசி அல்லது இணையவழிச் செய்தித் தளங்கள் ஊடாகச் சமர்ப்பிக்க முடியும்.
பொதுமக்கள் அளிக்கும் முறைப்பாடுகள் மீது நிறுவனங்களின் தலைவர்களால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் பிரத்தியேக டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்பின் மூலம் கண்காணிக்கப்படும்.
எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் தேசிய நேர்மை வாரம் நிறைவடைந்த போதிலும், இந்த திட்டம் அனைத்து அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற நிறுவனங்களிலும் எதிர்வரும் டிசம்பர் 31 ஆம் திகதி வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
திருகோணமலை மாவட்ட செயலகம்
அந்த வகையில் "நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" எனும் தொனிப்பொருளில் திருகோணமலை மாவட்ட செயலகத்தில் இன்று (27) சத்தியப் பிரமாண நிகழ்வு இடம்பெற்றது.
திருகோணமலை மாவட்ட செயலகத்தின் பிரதான மாநாட்டு மண்டபத்தில், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். சுதாகரன் தலைமையில், மாவட்ட செயலக அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் பங்கேற்புடன் நேர்மை சத்தியப் பிரமாணம் மேற்கொள்ளப்பட்டது.
இந்நிகழ்வில், பொதுமக்களுக்கு நேர்மையான, ஊழலற்ற, பொறுப்புணர்வுமிக்க மற்றும் மக்கள் மையப்படுத்தப்பட்ட அரச சேவையை வழங்குவதற்கான உறுதிமொழியை அதிகாரிகள் எடுத்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

செய்தி - ஹஸ்பர் ஏ.எச், எம்.என்.எம்.புஹாரி, NICKEY THOMSON
வடக்கு மாகாண ஆளுநர் செயலகம்
இதேவேளை நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை' தேசிய செயற்பாட்டின் கீழ், நேர்மையான அரசு சேவையை வலுப்படுத்தும் நோக்கில் வடக்கு மாகாண ஆளுநர் செயலக உத்தியோகத்தர்களுக்கான முதல்நாள் சத்தியப் பிரமாண நிகழ்வு இன்றைய தினம் (27) காலை 9 மணிக்கு ஆளுநர் செயலக முன்றலில் நடைபெற்றது.

தேசியக் கொடி, மாகாணக் கொடி என்பன ஆளுநரின் உதவிச் செயலாளர் மற்றும் ஆளுநர் செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஆகியோரால் ஏற்றப்பட்டதைத் தொடர்ந்து, உத்தியோகத்தர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு நடைபெற்றது.
யாழ்ப்பாண மாவட்டச் செயலகம்
"நேர்மையான கலாசாரம் – தூய்மையான இலங்கை" தேசிய செயற்பாட்டின் கீழ், நேர்மையான அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில் மாவட்டச் செயலக உத்தியோகத்தர்களுக்கான முதல்நாள் சத்தியப் பிரமாண நிகழ்வு இன்றைய தினம் (27) யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

சத்தியப் பிரமாண நிகழ்வினைத் தொடர்ந்து, யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - பு.கஜிந்தன், த. பிரதீபன்
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |