மாற்றப்படும் பாடசாலைகளின் பெயர்கள்: கோட்டாபயவின் திட்டம் அதிரடி ரத்து!
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் (Gotabaya Rajapaksa) ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட 671 மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மேம்படுத்தும் திட்டத்தை ரத்து செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
குறித்த திட்டத்திற்காக, ஒவ்வொரு பாடசாலைக்கும் இரண்டு மில்லியன் ரூபாய் வீதம் ரூ. 134 மில்லியனுக்கும் அதிகமான தொகை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த நிதியினால், பாடசாலையின் புதிய பெயர்ப்பலகையைத் தயாரிக்கவும், அவசரப் புனரமைப்புப் பணிகளுக்கு அவற்றைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பெயர்ப்பலகையை அகற்றுமாறு அறிவிப்பு
அறிவுறுத்தல்களின்படி, சம்பந்தப்பட்ட பாடசாலைகள் விரைவாக தேசியப் பாடசாலைகளாக பெயர்ப்பலகையைத் தயாரித்தன, அதற்காக ரூ. 500,000 மற்றும் அதற்கு மேற்பட்ட தொகையைச் செலவிட்டுள்ளன.
இதன்படி, இவ்வாறு மாற்றப்பட்ட அனைத்து பாடசாலைகளின் பெயர்ப்பலகைகளையும் அகற்றுமாறு தற்போதைய அரசாங்கம் அறிவித்துள்ளது.
அத்தோடு, தேசிய பாடசாலை பெயர், அதனுடன் தொடர்புடைய கடிதத் தலைப்புகள் மற்றும் முத்திரைகள் போன்றவற்றை நீக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கை
இந்த நிலையில், தொடர்புடைய பாடசாலைகள் மீண்டும் பழைய பெயரில் புதிய கடிதத் தலைப்புகள், முத்திரைகள் போன்றவற்றைத் தயாரிக்க வேண்டும்.
கோட்டாபய அரசாங்கத்தினால் தேசிய பாடசாலைகளின் எண்ணிக்கையை 329,000 ஆக உயர்த்துவதற்காக இந்தத் திட்டம் தொடங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
