இலங்கையில் சகவாழ்வை நிலைநாட்ட அரசாங்கம் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டம்
இலங்கையில் சமூகங்களுக்கிடையே சகவாழ்வை நிலைநாட்டுவதற்காக அரசாங்கம் மேற்கொண்டுள்ள வேலைத்திட்டத்திற்கு வலுவூட்டும் வகையில் வடக்கு மற்றும் கிழக்கு பிரதேசங்களை உட்படுத்தி தேசிய மாணவர் படையணி மௌன சேவையை செய்து வருவதா பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்தார்.
மஹியங்கணை - ரந்தெம்பே தேசிய மாணவர் படையணி பயிற்சி நிலையத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே பாதுகாப்புச் செயலாளர் இதனை தெரிவித்தார்.
இன, மத, பேதமின்றிய ஒன்றிணைவு
இதன்போது மேலும் கருத்து தெரிவித்த அவர், “நாட்டின் அனைத்து பகுதிகளிலுமுள்ள சிறுவர்கள் இன, மத, பேதமின்றி ஒன்றிணைந்து செயற்படுகின்றனர்.
மாணவர் படையணி நடவடிக்கைகளில் ஈடுபடும் சிறுவர்கள் சிறந்த தலைமைப் பண்பு, ஒழுக்கம், கடமைகளைச் செய்வதில் விடாமுயற்சி, சவால்களை எதிர்கொள்ளும் திறன், மற்றும் தன்னம்பிக்கையுடன் வாழ்வார்கள் என்பது புலப்படுகிறது.
மாணவர் படையணியின் செயற்பாடுகள்
உலக தொழில்வாய்ப்புத் துறையில் பாரிய மாற்றங்கள் ஏற்பட்டு வரும் இந்தக் காலகட்டத்தில், அதற்கேற்ப செயற்கை நுண்ணறிவு, தன்னியக்கமாக்கல், போன்ற தொழில்நுட்பங்கள் எதிர்கால வேலைகளுக்காக அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. அதற்காக தற்போதிருந்தே தயாராக வேண்டும்.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் என்ற வகையில் நான் மாணவர் படையணியின் செயற்பாடுகளை உன்னிப்பாக கவனித்து வருவதுடன், அதற்கு தேவையான வழிகாட்டுதல்கள் மற்றும் ஆலோசனைகளை வழங்கி வருகிறேன்” என்றார்.