என்ன தான் நடக்கிறது யாழ்ப்பாணத்தில்..!
யாழ்ப்பாணத்தில் மக்களின் காணிகளை விடுவிப்பதாக அரசாங்கம் கூறுகின்றபோதும், காணிகளை அபகரிப்பதிலும் இராணுவ மயமாக்கத்தினை முன்கொண்டு செல்வதிலும் சிறிலங்கா அரசாங்கம் தீவிரம் காட்டியே வருவதாக இன்று இடம்பெற்ற இரு சம்பவங்கள் கட்டியம்கூறுகின்றன.
அதில் ஒன்று வலிகாமம் வடக்கு பகுதியில் பாதுகாப்புப் படையினர் வசமிருந்த காணிகளை விடுவித்தது, மற்றையது வலி. கிழக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான காணியை அபகரிக்க முயன்றது.
காணி அபகரிப்பு
படையினர் வசமிருந்த சுமார் 108 ஏக்கர் காணிகளை இன்று விடுவிக்க பெருமெடுப்பில் நிகழ்வுகள் இடம்பெற்ற சமநேரத்தில், வலி. கிழக்கு பிரதேச சபைக்குச் சொந்தமான அக்கரை சுற்றுலாக் கடற்கரையில் கடற்படையினர் காணியை அடையாளப்படுத்துதல் மற்றும் அளவீடு செய்யும் முயற்சியில் ஈடுபட்டனர் என்ற தகவல் எமக்கு கிடைக்கப்பெற்றிருக்கிறது.
வலிகாமம் வடக்கு காணி விடுவிப்பு - முழுவிபரம் |
தகவல் அறிந்த தவிசாளர் தியாகராஜா நிரோஷ் அவ்விடத்திற்கு விரைந்து செல்வதற்கிடையில் கடற்படையினர் அவ்விடத்தில் இருந்து விலகிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இது தொடர்பில் வலி. கிழக்குப் பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தெரிவிக்கையில், “கடற்படையினருக்கு பிரதேச சபையின் காணியை தான் வழங்கியுள்ளதாக பிரதேச செயலாளர் அறிவித்திருந்தார். அவ்வாறாக அறிவிப்புக் கிடைத்தவுடன், குறித்த காணியை வழங்க முடியாது என நான் மறுத்திருந்தேன்.
இந் நிலையில் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (03) இரகசியமாக பிரதேச சபைக்குச் சொந்தமான சுற்றுலா வலயத்திற்குள் நுழைந்த கடற்படையினர் அளவீடுகளை மேற்கொண்டு புகைப்படங்களையும் எடுக்கின்றனர் என்ற தகவல் எனக்கு கிடைத்தது.
நான் பிறிதொரு கூட்டத்தில் இருந்து அவசரமாக குறித்த கடற்கரைக்கு விரைந்து சென்றபோது அங்கிருந்து ஏற்கனவே கடற்படையினர் விலகிச் சென்றுவிட்டனர். அவர்கள் கருமம் முடித்துச் சென்றார்களோ, அல்லது நான் வருகின்றேன் என தகவல் அறிந்து சென்றார்களோ தெரியவில்லை.
மக்களோடு மக்களாக இராணுவ புலனாய்வுத்துறை
பின்னர் நான் குறித்த பிரதேசத்தை பார்வையிட்ட போது இராணுவ புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர்கள் நுழைவுச் சிட்டை பெற்று மக்களோடு மக்களாக நிலைமைகளை அவதானித்துக் கொண்டு நின்றனர்.
அடிப்படையில் இந்த நிலம் உள்ளூராட்சி மன்றத்தின் ஆட்சியில் காணப்படும் நிலம். இதில் பிரதேச செயலாளர் முடிவுகளை இராணுவத்திற்கு வழங்க முடிவுகளை எடுக்க முடியாது.
மில்லியன் கணக்கில் எம்மால் முதலீடு செய்யப்பட்டுள்ள சுற்றுலா வலயம் ஒன்றை இராணுவமயப்படுத்த முடியாது” என்றார்.
கடற்படையினக்கு காணி வழங்கல்
வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் ஆட்சியில் உள்ள அக்கறை சுற்றுலா மையத்தில் கடற்படையினருக்கு காணி ஒதுக்கப்பட்டுள்ளதாக வலிகாமம் கிழக்கு பிரதேச செயலகத்தினூடாக கடிதம் மூலம் பிரதேச சபைக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில் இடைக்காடு கிராம அலுவலகர் பிரிவில் உள்ள அக்கறை பிரதேசத்தில் கடற்படை கண்காணிப்பு மையத்தினை நிறுவுவதற்கு கடற்படையினர் பிரதேச செயலகத்திடம் 20 பேர்ச் காணியை கோரியுள்ளனர்.
அதற்கமைய தங்களால் சுற்றுலா வலயமாக ஆட்சிப்படுத்தப்பட்டுள்ள காணியில் இரண்டு பரப்பினை கடற்படை கண்காணிப்பகம் அமைக்க வழங்குவதாக பிரதேச செயலகம் பிரதேச சபைக்கு கடிதம் மூலம் இவ்வாரம் அறிவித்திருந்தது.
இந்த அறிவிப்பைத் தொடர்ந்து பிரதேச சபையின் நிறைவேற்று அதிகாரியான தவிசாளர், உள்ளூராட்சி மன்றத்துக்கு உரிய முடிவுகளை எடுப்பது தொடர்பாக தவிசாளர் என்ற முறையில் சபையின் நிறைவேற்று அதிகாரியான தனக்கே அதிகாரம் உண்டு என்பதை பிரதேச செயலாளருக்கு சுட்டிக்காட்டியுள்ளார்.
கடற்படையினக்கு காணி வழங்குவதற்கான மறுப்பு
எது எப்படியிருப்பினும், படைத்தரப்புக்கு காணியை வழங்க முடியாது என தெரிவித்ததோடு, பிரதேச செயலகத்தினால் கடற்படையினருக்கு காணி வழங்க எடுக்கப்பட்டுள்ள முடிவை உடனடியாக நிறுத்துமாறும் பிரதேச செயலருக்கு பதில் கடிதத்தினூடாக அறிவித்திருந்தார்.
இக்கடிதத்தின் பிரதிகள் ஆளுநர், அரச அதிபர், மாகாண காணி ஆணையர் ஆகியோருக்கும் அனுப்பப்பட்டுள்ளது.
குறித்த காணி பிரதேச சபையினால் காலாகாலமாக சுற்றுலாத்துறைக்கென மில்லியன் கணக்கில் முதலீடு செய்யப்பட்டு எல்லைப்படுத்தப்பட்டுள்ளது.
சுற்றுலா மையம் மற்றும் சிறுவர் பூங்காவை உள்ளடக்கியதாக அக்கறை கடற்கரை மக்கள் பாவனையில் உள்ளது.
அவ்வாறான பிரதேசத்தில் பிரதேச சபையின் நிறைவேற்று அதிகாரியான தனக்கோ அல்லது பிரதேச சபைக்கோ எவ்வித அறிவிப்புகளும் இன்றி வெளிப்படைத் தன்மையற்ற முறையில் கிராம சேவையாளர், கடற்படையினர் சென்று இரகசியமாக பார்வையிட்டுள்ளனர்.
இது அரச நிர்வாகத்துக்கு இருக்கவேண்டிய வெளிப்படை தன்மையினையும் சட்ட ஒழுங்கையும் கேள்விக்குள்ளாக்கியுள்ளது. சுற்றுலா வலயமொன்றை இராணுவமயமாக்குவது அபிவிருத்திக்கு முரணான விடயமாகும் என தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதனையும் மீறி அதிகாரிகள் நடந்துகொள்வார்களாயின், தொடர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் உள்ளூராட்சி மன்றங்களின் அதிகாரங்களை மீறி எமக்கு சொந்தமான காணியை படைத்தரப்பின் தேவைகளுக்காக அபகரிப்பதாகவும் பிரதேச சபை தவிசாளர் சுட்டிக்காட்டிய நிலையில் இன்றைய அபகரிப்பு முயற்சி இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது.



