கடற்றொழிலாளர் மீது துப்பாக்கிச்சூடு : றிஷாட் எம்.பி விடுத்துள்ள அவசர வேண்டுகோள்
திருகோணமலை (Trincomalee) - குச்சவெளியிலிருந்து கடலுக்குச் சென்ற இஜாஸ் என்ற நபர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச்சூட்டுச் சம்பவத்தினைக் கண்டிப்பதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் (Rishad Bathiudeen) தெரிவித்துள்ளார்.
அத்துடன் துப்பாக்கிச்சூடு நடாத்திய நபர்கள் மீது சட்டநடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமென காவல்துறைமா அதிபரிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
குச்சவெளி பிரதேசத்திலிருந்து திருகோணமலை கடலுக்குச்சென்ற இஜாஸ் என்ற கடற்றொழிலாளர் மீது நேற்று (03) கடற்படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்காகி அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
கடற்படையினர் துப்பாக்கிச்சூடு
இது குறித்து கருத்துத் தெரிவித்த றிஷாட் பதியுதீன், ”கடற்றொழிலுக்காக கடலுக்குச்சென்ற அப்பாவி சமூகத்தினர் மீது கடற்படை பாதுகாப்புத்தரப்பினர் அத்துமீறி நடப்பதை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
சந்தேக நபர்களாக சந்தேகிக்கப்பட்டால் உரிய முறைப்படி விசாரித்து நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் இவ்வாறு தான்தோன்றித்தனமான முறையில் அப்பாவிகள் மீது துப்பாகிச்சூடு மேற்கொள்ளும் இச்செயற்பாட்டை நிறுத்த வேண்டும்.
இவ்வாறான செயற்பாட்டால் நாட்டின் பாதுகாப்புத்துறை மேல் மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றமைக்கு பெரும் உதாரணமாகி அமைந்து விடும். கடற்றொழில் சமூகத்தை அச்சமூட்டும் இச்செயற்பாடுகளை நிறுத்த வேண்டும்.
குறித்த சம்பவம் தொடர்பில் பாதுகாப்புத்தரப்பு உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டுமெனவும் இந்த சம்பவம் கடற்றொழில் சமூகத்துக்கு மட்டுமல்ல, நாட்டின் சட்ட ஒழுங்குக்கும் சவாலாக அமைந்துள்ளது” என தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
