வவுனியாவில் வைத்தியர் சுட்டு படுகொலை : மரண தண்டனையிலிருந்து தப்பினார் புளொட் நெடுமாறன்
வவுனியாவில் வைத்தியர் முகைதீனை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிரேமநாத் என்பவருக்கு வவுனியா மேல்நீதிமன்றம மரணதண்டனை வழங்கியநிலையில் மேன்முறையீட்டு நீதிமன்றம் அந்த தண்டனையை மாற்றி அவரை விடுதலை செய்து உத்தரவிட்டது.
மேன் முறையீட்டு நீதிமன்றின் நீதிபதிகளான சசி மகேந்திரன்,அமல்ரணராஜா ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை இன்று(20) அறிவித்தது.
இது தொடர்பாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா, ஜனாதிபதி சட்டத்தரணி அனில் சில்வா ஆகியோரின் வாதங்களை ஏற்ற நீதிமன்றம் இந்த தீர்ப்பை அறிவித்தது.
வவுனியாவில் வைத்தியர் சுட்டு படுகொலை
வவுனியாவில்கடந்த 2009ஆம் ஆண்டு 4ஆம் மாதம் 20ஆம் திகதி கற்குழியில் அமைந்துள்ள தனியார் வைத்தியசாலையில் கடமையில் இருந்த வைத்தியரான சுல்தான் முகைதீன் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டிருந்தார்.
இது தொடர்பில் குற்றவாளியாக சந்தேகிக்கப்பட்ட அன்றைய புளொட்ட் உறுப்பினரான நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிரேமநாத் என்பவர் மீது வவுனியா மேல்நீதிமன்றில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
மரண தண்டனை விதித்த நீதிபதி மா.இளஞ்செழியன்
நீண்ட விசாரணைகளின் பின்னர் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜூன் 8 ஆம் திகதி அப்போதைய வவுனியா மேல் நீதிமன்ற நீதிபதியான மா.இளஞ்செழியன் நெடுமாறன் என்பவரை குற்றவாளியாக கண்டு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.
இந்நிலையில் இந்த தீர்ப்பிற்கு எதிராக கெளரி சங்கரி சட்ட நிறுவனம் சார்பில் மேன் முறையீடு செய்யப்பட்டது. மேன்முறையீட்டு மனுமீதான விசாரணைகள் முடிவடைந்த நிலையில் இன்று தீர்ப்புக்காக திகதியிடப்பட்டிருந்தது.
மேன்முறையீட்டு நீதிமன்றம் விடுதலை
அந்தவகையில் குற்றவாளிக்கு எதிராக வவுனியா மேல்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மாற்றிய மேன்முறையீட்டு நீதிமன்றம் குறித்த மனுதாரரை வழக்கில் இருந்து முழுமையாக விடுவித்து தீர்ப்பளித்தது.
குறித்த மேன் முறையீட்டு வழக்கில் சட்டத்தரணி தர்மஜா தர்மராஜாவின் ஆலோசனையின் பிரகாரம் சட்டத்தரணி அன்டன் துரைசிங்கம் ஜெயாநந்தன், ஓஷதி ஹப்பு ஆராச்சியுடன் ஜனாதிபதி சட்டத்தரணிகளான கே.வி. தவராசா மற்றும் அனில் சில்வா ஆகியோர் முன்னிலையாகினர்
சட்ட மாஅதிபர் சார்பில் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அசாத் நவாவி முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
