நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் விவகாரம் : விசேட விசாரணைக் குழு நியமனம்
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட மோதல் சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதற்காக குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகத்தினால் இந்த விசாரணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளரும், சிறைச்சாலைகள் ஆணையாளருமான ஏ.சி. கஜநாயக்க தெரிவித்துள்ளார்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இரு கைதிகள் குழுக்களுக்கிடையே நேற்று (05) மதியம் 1.00 மணியளவில் இந்த மோதல் ஏற்பட்டிருந்தது.
கொழும்பு தேசிய வைத்தியசாலை
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவொன்றுக்கும், தண்டனை விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் குழுவொன்றுக்கும் இடையிலேயே இந்த மோதல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
இந்த மோதலில் இரு கைதிகள் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்த மேலும் 34 கைதிகள் நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பலத்த காயமடைந்த இருவர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன் பின்னர், சிறைச்சாலையின் கைதிகள் குழுவொன்று அதன் கூரை மீது ஏறி போராட்டத்தில் ஈடுபட்டதுடன், கூரை இடிந்து விழுந்ததில் மேலும் நான்கு கைதிகள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் காயமடைந்த கைதிகளில் சுமார் 10 பேருக்கு அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டுள்ளதாக நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர், விசேட வைத்திய நிபுணர் புஷ்பா கமலத்கே தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது
நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட இந்த பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்துவதற்காக சிறைச்சாலை அதிகாரிகள், காவல்துறையினர், காவல்துறை விசேட அதிரடிப்படையினர் (STF) மற்றும் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டிருந்ததுடன், சிறைச்சாலையைச் சுற்றியுள்ள பகுதிகளின் பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டிருந்தது.

சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளின் உறவினர்கள் சிலர் சிறைச்சாலைக்கு முன்னால் திரண்டு, கைதிகள் பற்றிய தகவல்களை அதிகாரிகள் வழங்கவில்லை எனக் கூறி அமைதியற்ற முறையில் நடந்துகொண்டனர்.
எனினும், காவல்துறையினர் தலையிட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ள கைதிகள் பற்றிய தகவல்களை அவர்களுக்கு வழங்கியதுடன், மேலும் சிலரை வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கவும் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |