நீர்கொழும்பு சிறை விவகாரம்! ஜனாதிபதி அநுர மீது விழுந்தது பழி
நீர்கொழும்பு சிறையில் நிகழ்ந்த மரணங்களுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் பங்கேற்றபோது அவர் இதனை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, தற்போதைய ஜனாதிபதி, முன்பு நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியபோது, சிறைகளில் நிகழும் மரணங்களுக்கு அரசாங்கமே பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியிருந்தார் என்பதை அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அநுர பேசிய காணொளி
இந்தக் கூற்றை உறுதிப்படுத்தும் விதமாக, 2020 நவம்பர் 30 அன்று நாடாளுமன்றத்தில் அநுர குமார திசாநாயக்க ஆற்றிய உரையின் காணொளிக் காட்சியை ரஞ்சித் மத்துமபண்டார அந்த ஊடக சந்திப்பில் எடுத்துக் காட்டியுள்ளார்.

அந்தக் காணொளியின்படி, அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த அநுர குமார திசாநாயக்க, ஒரு சிறையில் கைதியின் உயிர் பறிக்கப்பட்டால், அப்போதைய அரசாங்கமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தார்.
முறையான விசாரணை
அதன்படி, “அநுர குமார திசாநாயக்க அன்று முன்வைத்த அதே வாதம் இன்று அவருக்கும் பொருந்த வேண்டும். நீர்கொழும்பு சிறையில் பல உயிர்கள் பறிக்கப்பட்டுள்ளன. அவர் அன்று கூறியது போலவே, இன்று அரசாங்கத்தின் தலைவர் என்ற முறையில், இந்தத் துயரச் சம்பவத்திற்கான பொறுப்பிலிருந்து அவரால் தப்பிக்க முடியாது,” என்று ரஞ்சித் மத்துமபண்டார மேலும் வலியுறுத்தியுள்ளார்.

நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பேணுவதிலும், சிறையில் உள்ளவர்களின் உயிர்களைப் பாதுகாப்பதிலும் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாகச் சுட்டிக்காட்டிய மத்துமபண்டார, இது தொடர்பாக உடனடியாக ஒரு முறையான விசாரணை நடத்தப்பட்டு, உண்மை பொதுமக்களுக்கு வெளிப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |